உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கும்மிடி ரயில் நிலைய நடைமேடை விரிவு படுத்த பயணியர் கோரிக்கை

 கும்மிடி ரயில் நிலைய நடைமேடை விரிவு படுத்த பயணியர் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நடைமேடைகளை விரிவுப்படுத்த வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் என்பது புறநகர் மின்சார ரயில்களின் முனையமாகும். தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாய் செலவில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அங்கு நான்கு நடைமேடைகள் உள்ளன. அவற்றில் இரண்டாவது நடைமேடை மட்டும், 510 மீட்டர் நீளம் கொண்டது. மற்ற மூன்று நடைமேடைகளும், 410 மீட்டர் நீளம் கொண்டவை. மேற்கண்ட நடைமேடைகள், புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்ல போதுமானவை. ஆனால் விரைவு ரயில்கள் நின்று செல்ல போதுமானதாக இல்லை என்பது நீண்ட கால குறையாகும். கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் தற்போது, சர்க்கார் விரைவு ரயில் நின்று செல்கிறது. ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அந்த ரயில், இரண்டாவது நடைமேடையில் நின்று செல்கிறது. அதே ரயில், சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் போது, மூன்றாவது நடைமேடையில் நின்று செல்கிறது. அந்த நடைமேடை போதுமானதாக இல்லாததால், நான்கு பெட்டிகள், நடைமேடைக்கு வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் முதியோர் மற்றும் கர்ப்பிணியர் நடைமேடை கடந்து நிற்கும் பெட்டிகளில் ஏறி இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், விரைவு ரயில், நடைமேடைக்குள் நின்று செல்ல ஏதுவாக மற்ற மூன்று நடைமேடைகளையும், விரிவு படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ