ரயில் நிலைய கழிப்பறை சேதம் சீரமைக்க பயணியர் எதிர்பார்ப்பு
திருவாலங்காடு, சென்னை ---- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது, மணவூர் ரயில் நிலையம். இந்த மார்க்கமாக தினமும் 200க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதில், மணவூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 30 கிராமங்களில் இருந்து, 30,000 பேர் வரை ரயிலில் பயணிக்கின்றனர். மணவூர் ரயில் நிலையத்தில் ஒன்றாவது நடைமேடையில் இரு கழிப்பறை இருந்தது. தற்போது, முறையான பராமரிப்பு இல்லாததால் பாழடைந்து, கதவுகள் உடைந்துள்ளன. இதனால், பெண் பயணியர், சிறுநீர் கழிக்க இடமின்றி தவித்து வருகின்றனர்.ஆண்கள் பலர், ரயில் நிலையத்தின் அருகே உள்ள காலி இடத்தில், திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த கழிப்பறையை சீரமைத்து, பயன்பாட்டிற்க்கு கொண்டுவர வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.