சென்னை- - திருப்பதி இடையே மின்சார ரயில் இயக்க கோரிக்கை
திருத்தணி:'சென்னை சென்ட்ரலில் இருந்து, திருத்தணி வழியாக திருப்பதி வரை செல்லும் விரைவு மின்சார ரயிலை, மீண்டும் இயக்க வேண்டும்' என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை சென்ட்ரலில் இருந்து, இரவு 7:10 மணிக்கு விரைவு மின்சார ரயில் புறப்பட்டு, திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்துார், திருவாலங்காடு, அரக்கோணம், திருத்தணி, ரேணிகுண்டா வழியாக, இரவு 10:30 மணிக்கு திருப்பதி சென்றடைந்து வந்தது. இந்த ரயிலில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், திருத்தணி மற்றும் திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிகளவில் பயணித்து வந்தனர். கொரோனா தொற்று காரணமாக, 2020ம் ஆண்டு முதல் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின், ஐந்து ஆண்டுகளாக விரைவு ரயில் இயக்கப்படாமல் உள்ளது. இதனால், சென்னையில் பணிபுரியும் ஊழியர்கள், திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை - -திருப்பதி இடையே நிறுத்தப்பட்ட விரைவு மின்சார ரயிலை, மீண்டும் இயக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் ரயில் பயணியர் சங்கம் சார்பில், பலமுறை சென்னை கோட்ட ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பக்தர்கள் மற்றும் பயணியரின் நலன் கருதி, விரைவு மின்சார ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.