ரிட்டர்ன் டிக்கெட் வழங்க ரயில் பயணியர் கோரிக்கை
கும்மிடிப்பூண்டி, எளாவூர் மற்றும் ஆரம்பாக்கம் ரயில் நிலையங்களில், 'ரிட்டர்ன் டிக்கெட்' வழங்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை வரை தினமும், 15 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மார்க்கத்தில், கும்மிடிப்பூண்டியை அடுத்து, எளாவூர் மற்றும் ஆரம்பாக்கம் ஆகிய இரு ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த இரு ரயில் நிலையங்களிலும், தினமும் நுாற்றுக்கணக்கான கிராம மக்கள், புறநகர் மின்சார ரயில்களில் சென்று வருகின்றனர். இந்த இரு ரயில் நிலையங்களும், புறநகர் அல்லாத பகுதியாக இருப்பதால், இங்குள்ள டிக்கெட் கவுன்டர்களில், 'ரிட்டர்ன் டிக்கெட்' வழங்குவதில்லை. இதனால், பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எளாவூர், ஆரம்பாக்கம் பகுதியில் இருந்து, சென்னை சென்று திரும்பும் ரயில் பயணியர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் காத்திருந்து டிக்கெட் பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே, கிராம மக்களின் சிரமம் கருதி, இரு ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில், 'ரிட்டர்ன் டிக்கெட்' வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.