உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் மக்கள்; அலட்சியம் காட்டும் ஊராட்சி நிர்வாகம்

குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் மக்கள்; அலட்சியம் காட்டும் ஊராட்சி நிர்வாகம்

உடுமலை : பெரியகோட்டை ஊராட்சியில், முறையான குடிநீர் வினியோகம் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; தொடர்ந்து தண்ணீர் விலைக்கு வாங்க முடியாமல் பொதுமக்கள் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட பெரியகோட்டை ஊராட்சிக்கு, திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.மக்கள் தொகை அதிகமுள்ள இந்த ஊராட்சியில், குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் நாள்தோறும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட சிவசக்தி காலனி விரிவாக்க குடியிருப்போர் பகுதியில், குடிநீர் நான்கு நாட்களுக்கு மேலாகியும் வினியோகிக்கப்படவில்லை. இதனால், மக்கள் லாரி தண்ணீர் வாங்கி வருகின்றனர். அவ்வாறு வாங்க முடியாதவர்கள் நகரப்பகுதி வரை வந்து குடிநீர் எடுத்துச்செல்கின்றனர்.மேலும், அப்பகுதிக்கான மேல்நிலை குடிநீர் தொட்டி பல மாதங்களாகியும், சுத்தம் செய்யப்படாமல் குடிநீர் அதிகம் மாசுபடிந்து வருவதாகவும், மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.குடிநீர் பிரச்னை குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:சிவக்குமார், சிவசக்தி காலனி குடியிருப்போர் சங்க செயலாளர்:ஒருநாள் இடைவெளியில் குடிநீர் விடப்படுவதாக காட்டிக்கொள்வதற்கு, பெயரளவில் குழாய் திறந்து விடுகின்றனர். அரைமணிநேரம் மட்டுமே குடிநீர் வருகிறது. அதிலும், மிக குறைவான வேகத்தில் வினியோகிக்கப்படுகிறது.காற்று மட்டுமே பலமாக வருகிறது. குடிநீர் வரி முழுமையாகவும் முறையாகவும் கட்டுகிறோம். ஆனால், ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் பிரச்னைக்கு ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சாக்கு சொல்கின்றனர்.ஒன்றிய நிர்வாகம், இப்பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்னை தொடர்ந்தால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.சித்ரா: இங்குள்ள பல வீடுகளிலும் போர் வசதி கிடையாது. மேலும் லாரி தண்ணீர் வாங்கும் அளவுக்கு எங்களுக்கு வசதியும் கிடையாது. சங்கர் நகரில் தண்ணீர் சீராக வருகிறது. ஆனால் எங்கள் பகுதியில் வருவதில்லை.இதனால், தொலைதுாரம் நடந்து சென்று குடத்தில் தண்ணீர் எடுத்து வருகிறேன். குடிநீர் வரவில்லை என புகார் கூறினால், அணையில் தண்ணீர் இல்லை, குடிநீர் எடுத்துவிடும் இடத்தில் மின்சாரம் இல்லை என எளிதில் பதில் கூறிவிடுகின்றனர். ஆனால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறோம்.சுப்புலட்சுமி: வயதான நிலையில், குடிநீர் அடிக்கடி வராமல் அருகிலுள்ள வீடுகளில் சென்று கேட்க வேண்டியுள்ளது. போர்வெல் வசதியும் கிடையாது. குடிநீர் இல்லாமல் என்ன செய்வதென தெரிவதில்லை. சீரான குடிநீர் முறையான இடைவெளியில் வினியோகிக்கப்பட வேண்டும்.இவ்வாறு கூறினர்.ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:திருமூர்த்தி அணை பகுதியில், மின்சாரம் இல்லாமல் ஊராட்சியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சரிசெய்யப்பட்டு வினியோகம் சீராக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.பி.டி.ஓ., சுப்ரமணியம் கூறியதாவது:குடிநீர் வடிகால் வாரியத்தில் மின்சாரம் பாதிக்கப்பட்டு, முழுவதும் 'ஷட் டவுன்' ஆகிவிட்டது. தற்போது சரிசெய்து ஊராட்சிகளுக்கு சீரான குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பெரியகோட்டைக்கு வழக்கமாகவே தேவைக்கு ஏற்ப குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. எந்த பகுதிகளில் வினியோகம் பாதிக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை