நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் 25 ஊராட்சிகள் இணைகின்றன?
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் இணைக்கும் நோக்கில், 25 கிராம ஊராட்சிகளின் அடிப்படை விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை ஒட்டி அமைந்துள்ள, கிராம ஊராட்சிகள், எதிர்கால நலன் கருதி, நகர உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட உள்ளன.திருப்பூர் மாநகராட்சியுடன், அ.பெரியபாளையம், எஸ்.பெரியபாளையம், முதலிபாளையம், இடுவாய், காளிபாளையம், பெருமாநல்லுார், கணக்கம்பாளையம், மங்கலம், கரைப்புதுார், பழங்கரை, கணியாம்பூண்டி, நாச்சிபாளையம் ஆகிய 12 ஊராட்சிகள்;பல்லடம் நகராட்சியுடன், ஆறுமுத்தாம்பாளையம், வடுகபாளையம், மாணிக்காபுரம் ஊராட்சிகள்; உடுமலை நகராட்சியுடன், கணக்கம்பாளையம், பெரியகோட்டை, கண்ணமநாயக்கனுார் ஊராட்சிகள்;தாராபுரம் நகராட்சியுடன், கவுண்டச்சிபுதுார், நஞ்சியம்பாளையம் ஊராட்சிகள்;காங்கயம் நகராட்சியுடன் நத்தக்காடையூர் ஊராட்சி; குன்னத்துார் பேரூராட்சியுடன், கம்மாளக்குட்டை, நவக்காடு, கருமாஞ்சிறை ஊராட்சிகள்; கணியூர் பேரூராட்சியுடன், ஜோத்தம்பட்டி ஊராட்சி ஆகியவற்றை இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.உத்தேச அறிக்கை வெளியிடப்பட்டு, வருவாய் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாயிலாக, இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த மாதம் 28 ம் தேதி சென்னையில் இருந்து, அவசர சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு, திருப்பூர் மாவட்டத்தில், நகர உள்ளாட்சிகளுடன் இணையும், 25 ஊராட்சிகளின் அடிப்படை புள்ளிவிவரங்களை, 29 ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.பி.டி.ஓ., மற்றும் மண்டல துணை பி.டி.ஓ.,கள் அடங்கிய குழுவினர், விவரங்களை சேகரித்து, இரவு, 8:00 மணிக்கு ஆன்லைன் மூலம் சமர்ப்பித்துள்ளனர். இணைப்பு பணிகள்முழு வேகமெடுக்கும்திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் இணைக்கும் நோக்கில், 25 கிராம ஊராட்சிகளின் அடிப்படை விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.ஊராட்சிகளின், 2011ம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் தற்போது மக்கள் தொகை விவரம் பெறப்பட்டது. அங்கன்வாடி மையங்களில் பராமரிக்கப்படும் விவரங்களை கேட்டு, ஒருங்கிணைத்து வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளின் மொத்த பரப்பளவு, வேளாண் சாகுபடி விவரங்கள், ஏற்கனவே நகர உள்ளாட்சி அமைப்புகளின் எல்லையில் அமைந்துள்ள விவரம், நகர உள்ளாட்சி எல்லைக்கும், கிராம ஊராட்சி எல்லைக்கும் இடையேயான இடைவெளி; ஊராட்சிகள் தொடர்பான பிரத்யேக சிறப்பு குறிப்புகளும் கேட்டு பெறப்பட்டுள்ளது. ஆன்லைன் படிவத்தில், இணைக்கப்பட உள்ள நகர உள்ளாட்சியின் பெயர்; ஒன்றியத்தின் பெயர், ஊராட்சியின் பெயர், 2011 மற்றும் 2024ம் ஆண்டு மக்கள் தொகை, பரப்பளவு, வீடுகளின் எண்ணிக்கை, வரி இனங்கள் விவரம், வேளாண் நிலங்களின் பரப்பளவு போன்ற விவரங்கள் பூர்த்தி செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இணைப்பு பணிகள் துவங்கியிருந்தாலும், ஊராட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; ஊரக உள்ளாட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்த பிறகு, இப்பணிகள் முழு வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊராட்சிகள் எண்ணிக்கை குறையும்
ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம், ஜன., 5ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான எவ்வித அறிவிக்கையும் வெளிவரவில்லை.மாநில அளவில், நகர உள்ளாட்சிகளை ஒட்டியுள்ள ஊராட்சிகளை இணைக்கும் பணி துவங்கியுள்ளது. இதன்காரணமாக, வார்டு பிரிப்பு பணி, பழைய வார்டுகள் சீரமைப்பு என, பல்வேறு பணிகள் இருக்கின்றன. அப்பணிகளை முடித்த பிறகே தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கோரியிருந்த, 25 ஊராட்சிகளின் அடிப்படை விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட போது, 273 ஊராட்சிகள் இருந்தன; 2011ல், திருப்பூர் மாநகராட்சியுடன் எட்டு ஊராட்சிகள் இணைந்தன. தற்போது மீண்டும், 25 ஊராட்சிகள் நகர உள்ளாட்சிகளுடன் இணையும்பட்சத்தில், மொத்த ஊராட்சிகள் எண்ணிக்கை, 240 ஆக குறையும். தொடர்ந்து, உடுமலை, அவிநாசி, ஊத்துக்குளி போன்ற பெரிய ஒன்றியங்களை பிரிக்கும் பணிகளையும் துவக்க வேண்டுமென, வலியுறுத்தியுள்ளோம். - ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்.