திருப்பூர்;மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 6.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை தேர்வு செய்து, பட்டியல் சமர்ப்பிக்க ஊராட்சி குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம், கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள, மாவட்ட ஊராட்சி குழு அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யபாமா தலைமை வகித்தார். துணை தலைவர் சிவகாமி, ஊராட்சி செயல் அலுவலர் முரளி கண்ணன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், 2023 - 24ம் ஆண்டுக்கான மாநில நிதிக்குழு மானியத்தில் தேர்வு செய்யப்பட்ட, 3.30 கோடி ரூபாய் மதிப்பிலான 38 பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யபாமா பேசியதாவது:திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்கு, 15வது நிதிக்குழு மானியத்தில், 4.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பணி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் ஒவ்வொருவருக்கும், 23 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடுத்த ஒரு மாதத்துக்குள் பணி பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும்.சுகாதாரம், 30 சதவீதம், குடிநீர் 30; பொதுவான வளர்ச்சி பணிகள் 40 சதவீதம் என்கிற அடிப்படையில் பணிகளை தேர்வு செய்யவேண்டும். மிக முக்கியமாக, ஒவ்வொரு கவுன்சிலரும், குறைந்தபட்சம் இரண்டு அங்கன்வாடி மையத்துக்கு கழிப்பிடம் கட்டும் பணியை கட்டாயம் தேர்வு செய்யவேண்டும்.மாவட்ட ஊராட்சியின், மாநில நிதிக்குழு மானியத்தில், ஒவ்வொரு ஊராட்சி கவுன்சிலருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில், இப்பணிகளுக்கான அனுமதி அளிக்கப்படும்.வழக்கம்போல் காலதாமதம் செய்யாமல், புதிய பணிகளை தேர்வு செய்து, 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவேண்டும். குடிநீர், சாலை பணிகள், சுகாதாரம் சார்ந்த புதிய பணிகளை தேர்வு செய்யவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.