கேமரா கட்டுப்பாட்டு அறை தயார்
பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில், குற்ற சம்பவங்களை தடுக்க, போலீசார், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து, பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் கூறுகையில், 'பல்லடம் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில், ஏற்கனவே, 300க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக மேலும், 100 கேமராக்கள் தருவிக்கப்பட உள்ளதால், எண்ணிக்கை, 400ஆக உயர உள்ளது. தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., நிதியை பயன்படுத்தியே இத்தனை பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த, 400 கேமராக்களையும் கட்டுப்படுத்தும், கட்டுப்பாட்டு அறை, பல்லடம் ஸ்டேஷன் வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடிந்து, மாவட்ட எஸ்.பி., உத்தரவின் பேரில், விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது, வழக்கு விசாரணைகளுக்கு மிகவும் பயனளிப்பதுடன், குற்ற சம்பவங்களுக்கு எளிதில் தீர்வு காண முடியும்' என்றார்.