தேங்காய் ஏலம்; கிலோ ரூ.57.22
உடுமலை: மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ. 57.22க்கு விற்பனையானது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. அதே போல், மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கொப்பரை மற்றும் தேங்காய் ஏலம் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் நடந்த ஏலத்திற்கு, 820 கிலோ எடையுள்ள, 1,500 தேங்காய், 7 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்தில், 8 வியாபாரிகள் பங்கேற்றனர். இதில், அதிகபட்ச விலையாக ஒரு கிலோ தேங்காய், ரூ. 57.22க்கும் குறைந்த பட்ச விலையாக, ரூ.55.10 என சராசரியாக, ரூ.56க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ரூ.45 ஆயிரத்து, 220 ஆகும். அதே போல், கொப்பரை ஏலத்திற்கு, 10 விவசாயிகள், 10 மூட்டை அளவுள்ள, 217 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்தில், அதிகபட்சமாக,ஒரு கிலோ ரூ. 215.66க்கும், குறைந்த பட்சமாக, ரூ. 150.16 என, சராசரியாக, ரூ.210.66க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ரூ.56 ஆயிரத்து,107 ஆகும். ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்த பொருளுக்குரிய தொகை விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. தேசிய அளவில் வியாபாரிகள் பங்கேற்பதால், கூடுதல் விலை கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.