அமராவதி புதிய ஆயக்கட்டுக்கு உயிர்த்தண்ணீர் வரும் 20 முதல் 15 நாட்கள் வழங்க கருத்துரு
உடுமலை; உடுமலை அமராவதி அணையிலிருந்து, புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் பாசனத்துக்கு நிலைப்பயிர்களை காப்பாற்றும் வகையில், வரும், 20ம் தேதி முதல், 15 நாட்களுக்கு உயிர்த்தண்ணீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழையால், அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்த நிலையில், பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.இதனையடுத்து, அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 7,520 ஏக்கர் நிலங்களில், குறுவை நெல் சாகுபடிக்காக, கடந்த, 7ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.வரும், அக்., 20 வரை, 135 நாட்களில், 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில், ஆற்று மதகு வழியாக, வினாடிக்கு, 300 கனஅடி வீதம், 2,073.60 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்பட உள்ளது.அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25,250 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.வழக்கமாக, ஆக., மாதம் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் நிலையில், பாசன நிலங்களில் நிலைப்பயிர்களாக உள்ள தென்னை, கரும்பு, வாழை, காய்கறி பயிர்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக, பிரதான கால்வாயில் நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.இதனையடுத்து, வரும், 20ம் தேதி முதல், 15 நாட்களுக்கு புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, பிரதான கால்வாய் வாயிலாக உயிர்த்தண்ணீர் திறக்க, நீர் வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர். அரசு அனுமதி பெற்று, தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அமராவதி அணை நீர் இருப்பு திருப்தியாக உள்ள நிலையில், பருவமழையும் துவங்கியுள்ளதால், மீதம் உள்ள பழைய ஆயக்கட்டு, அலங்கியம் முதல் கரூர் வரையுள்ள, 10 வலது கரை கால்வாய்களுக்குட்பட்ட, 21,867 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.