உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சமையல் எரிவாயு வாசனை: காரணம் என்ன?

சமையல் எரிவாயு வாசனை: காரணம் என்ன?

பல்லடம்; சமூகநல ஆணையரகம் சார்பில், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம், பல்லடம் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நடந்தது.குழந்தைகள் வளர்ச்சி திட்ட திருப்பூர் நகர் அலுவலர் அபராஜிதா, ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை மேலாளர் ராகேந்த் பேசியதாவது:எரிவாயு சிலிண்டரில் நிரப்பப்படும் வாயு மோசமான வாடையில் இருப்பதற்கு முக்கிய காரணம் உள்ளது. ஏதாவது காரணங்களால், சிலிண்டரில் இருந்து எரிவாயு வெளியேறும் போது, அது, நறுமணத்துடன் இருந்தால், நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விடுவோம். அதன் மோசமான வாடையை உணர்ந்து, உடனடி தடுப்பு நடவடிக்கையில் இறங்குவோம் என்பதற்காகவே அதற்கு மோசமான வாடை பயன்படுத்தப்பட்டுள்ளது.

தரையில் அடுப்புவைக்கக்கூடாது; ஏன்?

எல்.பி.ஜி., எரிவாயு தண்ணீர் போன்று இருந்து, வாயுவாக வெளியேறும். காற்றை விட இது அதிக எடை கொண்டது. எனவே, ஏதாவது காரணங்களால் எரிவாயு வெளியேறும் போது, அது மேலே எழும்பாமல், தரைப்பகுதியில் தான் பரவி இருக்கும். இதன் காரணமாகத்தான், சிலிண்டர்களை கீழே வைத்து, கேஸ் அடுப்புகளை உயரமான இடத்தில் வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.அடுப்பை தரையில் வைத்து பயன்படுத்தும்போது, விபத்து அபாயம் அதிகம் உள்ளது.எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக கையாண்டால், இதுதான் சிறந்த எரிபொருள். அதேசமயம் பாதுகாப்பு இன்றி, அலட்சியத்துடன் கையாண்டால் இதுதான் மோசமான எரிபொருள். பெட்ரோல், டீசலை காட்டிலும், விரைவில் தீப்பிடிக்கக் கூடிய ஆபத்தான எரிபொருளாகும். எனவே, கவனமாக கையாண்டு, ஆபத்தின்றி பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு ராகேந்த் பேசினார்.முன்னதாக, உணவு பாதுகாப்பு பயிற்சியாளர் முகமது ஷெரீப், எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் முறை, பாதுகாப்பு நடவடிக்கைகள், தேர்வு செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை