பயிர் மகசூல் - விளைச்சலை அதிகரிக்கும் சிட்டுக்குருவி
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம் சார்பில், உலக சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லுாரியில் நடந்தது.என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.மாவட்ட வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் பேசியதாவது:மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பறவைகள் தோன்றிவிட்டன. சிட்டுக்குருவிகள் பயிர்களில் உள்ள புழு, பூச்சிகளை உண்டு பயிர்களின் மகசூல் மற்றும் விளைச்சலை அதிகரிக்கிறது. விதை பரவுதலை ஊக்குவித்து மரங்களின் எண்ணிக்கையையும் பறவைகள் பெருக்குகின்றன.மனிதர்கள் இன்றி பறவைகள் உயிர்வாழ முடியும்; ஆனால் பறவைகள் இன்றி மனிதர்களால் வாழ முடியாது. நகரமயமாவதாலும், பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதாலும், உணவு கிடைக்காமல் சிட்டு குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே பறவைகளை பாதுகாப்பது நமது கடமையாகும். கோடைக்காலங்களில் நமது வீடுகளில் குருவிகளின் தாகம் தணிக்க மண்சட்டியில் தண்ணீர் வைக்க வேண்டும், என்றார்.மாணவ, மாணவிகளுக்கு சிட்டுக்குருவிகள் போஸ்டர் வழங்கப்பட்டது. மாணவ செயலர்கள் மதுகார்த்திக், செர்லின், நவீன்குமார், ரேவதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில், மாணவ மாணவியர் 'பறவைகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு, பறவைகளை பாதுகாப்போம்' எனும் தலைப்பில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.