வனவிலங்கு-- மனித மோதல் தடுக்க விவசாயிகள் சங்கம் யோசனை
உடுமலை; அனைத்து வன ஊழியர்களுக்கும், வனப்பகுதிகளுக்குள் பயன்படுத்தும் வகையில், வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் கூடியவாக்கி- டாக்கி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி அறிக்கை: யானை, சிறுத்தை, கரடி, பாம்பு உள்ளிட்ட வன விலங்குகளால், ஆண்டுதோறும், 1,200க்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என, புள்ளி விவரங்கள் கூறுகின்றன.இவற்றில், விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்களே பெரும்பாலானவர்களாக உள்ளனர். இவை அனைத்தும், வனவிலங்கு - மனித மோதலாக கணக்கிடப்படுகிறது.விலங்குகள், வனப்பகுதியை விட்டு விளைநிலங்களுக்குள் நுழையும் போது, எண்ணற்ற விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் இறக்கின்றனர்.காவல்துறைக்கு, 100, தீயணைப்புத்துறைக்கு, 101 உள்ளிட்டவை இருப்பது போல், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க அவசர கால தொடர்பு எண் தேவை. இதன் வாயிலாக, விவசாயிகள், வனத்துறை ஊழியர்களை உடனடியாக தொடர்பு கொண்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.தமிழக அரசு, அனைத்து வன ஊழியர்களுக்கும், வனப்பகுதிகளுக்குள் பயன்படுத்தும் வகையில், வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் கூடியவாக்கி- டாக்கி வழங்க வேண்டும்.இவை, வனவிலங்கு- - மனித மோதல்களை தடுப்பதோடு மட்டுமின்றி, விவசாய நிலங்களில் பயிர்கள் அழிக்கப்படுவதையும் தடுக்க உதவும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.