தென்னையைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்
பொங்கலுார்; பொங்கலுார் பகுதி மழை மறைவு பிரதேசம் ஆகும். பி.ஏ.பி.,யை நம்பியே விவசாயம் நடக்கிறது.பொங்கலுார் பகுதி நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மண்டலத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்தாண்டு தமிழகத்தில் பருவமழை பொய்த்தது.கேரளாவிலும் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால், கடந்தாண்டு இரண்டு சுற்று தண்ணீர் மட்டுமே கிடைத் தது. எனவே, பெரும்பாலான குளம், குட்டைகள் வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் வற்றி விட்டது. தற்போது நான்கில் ஒரு பகுதிக்கு பாசனம் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள முக்கால் பங்கு விவசாய நிலங்கள் காய்ந்து கிடக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர்.தென்னைக்கு தண்ணீர் இல்லாவிட்டால் வறண்டு விடும். மீண்டும் அதை பயிர் செய்து பலனுக்கு வர பத்து ஆண்டு ஆகிவிடும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தென்னை விவசாயிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்தாண்டு வரலாறு காணாத அளவு தேங்காய் விலை உயர்ந்துள்ளது. தென்னை மரங்கள் உயிருடன் இருந்தால்தான் அதன் பலனை அனுபவிக்க முடியும். வறட்சி காரணமாக மரத்தில் உள்ள குரும்பைகள் உதிர்ந்து விட்டன. வடகிழக்கு பருவ மழை துவங்கும் வரை தண்ணீர் இல்லாவிட்டால் மரங்கள் காய்ந்து விடும்.எனவே, விவசாயிகள் தென்னை மரங்களை காப்பாற்ற ஆழ்குழாய் கிணறுகளை அமைத்துள்ளனர். அதுவும் பயன் தராததால் தற்போது தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னைக்கு ஊற்றி வருகின்றனர்.தற்போது நல்ல மழை பெய்து பி.ஏ.பி., தொகுப்பு அணைகள் நிரம்பியுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் அடுத்த மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதாக தெரிகிறது.அணைகளில் தண்ணீர் நிறைந்துள்ள போதிலும் பாசனப்பகுதிகள் வறண்டு கிடப்பதால் போர்க்கால அடிப்படையில் உடனடியாக தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டும்; வாடும் தென்னை மரங்களை காப்பாற்ற உயிர் தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.