விவசாயிகள் குறைகேட்பு வேளாண் மாணவர் பங்கேற்பு
திருப்பூர் : விவசாயிகள் குறைகேட்பு கூட்ட நடவடிக்கையை, வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் நேற்று பார்வையிட்டனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின், வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல்துறையில், 4ம் ஆண்டு பயிலும் இளைநிலை வேளாண் மாணவர்கள், பெருமாநல்லுார், உடுமலை மற்றும் பொங்கலுார் என, மூன்று குழுக்களாக வந்துள்ளனர்.ஊரக வேளாண் பணி அனுபவம் என்ற தலைப்பில், தோட்டக்கலை, வேளாண் பணிகளை பார்வையிட்டும், விவசாயிகளுடன் கலந்தாய்வு நடத்தியும் பயிற்சி பெற்று வருகின்றனர்.மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்று, கூட்ட நடைமுறைகளை நேற்று பார்வையிட்டனர். குறிப்பாக, பொங்கலுார், உடுமலை, பெருமாநல்லுார் மாணவர் குழுக்கள் சார்பில், கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.தென்னையை தாக்கும், காண்டாமிருக வண்டுகளை பிடிக்கும் பொறி, பல்வகை நுண்ணுாட்ட சத்துக்கள் என, கண்காட்சியில் பல்வேறு பொருட்களை வைத்திருந்தனர்; பார்வையிட்ட விவசாயிகளுக்கு, அவற்றின் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.