மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு; மகனை கொலை செய்த தந்தை கைது
திருப்பூர்; திருப்பூரில் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கல்லால் அடித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், கல்லம்பாளையம், ரயில்வே லைன், சித்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கன்னியப்பன், 60; கட்டட தொழிலாளி. இவரது மகன் குட்டியப்பன், 32 என்பவர், பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்தார். சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குட்டியப்பன் மது அருந்த, தனது தந்தை கன்னியப்பனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால், தந்தையிடம் வாக்குவாதம் செய்தார். இதனால், ஆத்திரமடைந்த அவர், அருகில் கிடந்த கல்லை எடுத்து மகனை தாக்கினார். பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த குட்டியப்பனை, அருகில் இருந்தோர் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குட்டியப்பன் இறந்தார். கொலை தொடர்பாக, கன்னியப்பனை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.