வேப்ப மரம் வெட்டி சாய்ப்பு பசுமை ஆர்வலர்கள் வேதனை
அவிநாசி: அவிநாசி அருகே பழமையான வேப்பமரம் அடியோடு வெட்டிச் சாய்க்கப்பட்டது.அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சியில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன் உள்ள வீட்டின் அருகில் பழமையான வேப்பமரம் இருந்தது. நேற்று வருவாய்த் துறையின் அனுமதி இல்லாமல் வேப்பமரம் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டது.அவிநாசி சுற்றியுள்ள ஊராட்சி கிராமங்களில் அனுமதி பெறாமல் பட்டா நிலத்தில் மரத்தை வெட்டுவதும், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை வெட்டி கடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. கடந்த சில வாரங்கள் முன் 40க்கும் மேற்பட்ட மரங்களை வெங்கமேடு பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்திலும், பட்டா நிலத்திலும் தனிநபர் வெட்டி கடத்தியுள்ளார். ஏற்கனவே, சாலை விரிவாக்கம் என்ற பேரில் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு வருகிறது.அவிநாசி தாசில்தார் சந்திரசேகரிடம் கேட்டதற்கு, ''அப்பகுதியில், வறண்டு போன 2 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். அதன்பேரில் அனுமதி தரப்பட்டது. வேப்ப மரம் வெட்ட அனுமதி அளிக்கவில்லை. இது குறித்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.---வெட்டிச் சாய்க்கப்பட்ட வேப்ப மரம்
நடவடிக்கை பாயட்டும்
பசுமை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நெடுஞ்சாலை ஓரத்திலும், மைய தடுப்பிலும் சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் வகையிலும் பல்வேறு உயிரினங்களுக்கு வாழ்வளிக்கும் வகையிலும் மரங்களை நட்டு, விடா முயற்சியுடன் பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். வருவாய்த் துறையினர், ஊராட்சி நிர்வாகத்தினர் இணைந்து கிராமப் பகுதிகளில் மரங்களை வெட்டி கடத்துபவர்களை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பசுமை ஆர்வலர்கள்.