ஊராட்சியில் பசுமை தமிழக திட்டம் மரக்கன்றுகள் பராமரிப்பு
உடுமலை; ஜல்லிபட்டி ஊராட்சியில், பசுமை தமிழக திட்டத்தின் கீழ், ஐந்தாயிரம் மரக்கன்றுகளுக்கான நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டிலும் மரக்கன்று நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாற்றுகள் பராமரிக்கப்படுகின்றன.போடிபட்டி ஊராட்சி அலுவலகத்தின் அருகில் நாற்று பண்ணை அமைக்கப்பட்டு, பழவகை மரக்கன்றுகள், புளி, வேம்பு, அரசம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களின் நாற்றுகள் பராமரிக்கப்பட்டு ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன.நடப்பாண்டில், 35 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான நாற்றுகளும் தயார்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது கூடுதல் திட்டமாக, பசுமை தமிழக இயக்கத்தின் கீழ், ஒரே இடத்தில் ஐந்தாயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கும் பணிகள் துவங்கியுள்ளது.வனத்துறை மற்றும் ஒன்றிய நிர்வாகம் இணைந்து திட்டத்தை செயல்படுத்துகிறது. திட்டத்தை செயல்படுத்துவதற்கு, சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.அக்குழுவில் ஊராட்சி தலைவர் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய ஒலுவலர்களும் உள்ளனர். ஐந்தாயிரம் மரக்கன்றுகள் ஒரே இடத்தில் அடர் நடவு செய்வதற்கு ஜல்லிபட்டி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.பசுமை தமிழக இயக்க திட்டத்தின் கீழ், ஐந்தாயிரம் மரக்கன்றுகள் தயார்படுத்துவதற்கு ஆறு லட்சத்து 40ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வனத்துறையின் சார்பில் ஜல்லிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேலை உறுதி திட்டத்தின் வாயிலாக, நியமிக்கப்படும் பணித்தள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தற்போது பூவரசம், பலா, நாவல், கொய்யா உட்பட மரக்கன்றுகள் பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.