உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராமங்களில் மரக்கன்று நடும் திட்டத்தால்... பசுமை திரும்பும்! ஊரக வளர்ச்சித்துறையால் பணிகள் தீவிரம்

கிராமங்களில் மரக்கன்று நடும் திட்டத்தால்... பசுமை திரும்பும்! ஊரக வளர்ச்சித்துறையால் பணிகள் தீவிரம்

உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களிலுள்ள காலியிடங்களில், பழ வகை மரக்கன்றுகளை நடவு செய்ய, ஊரக வளர்ச்சித்துறையின் நாற்றுப்பண்ணையில், மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. மழை துவங்கியதும் மரக்கன்று நடவு பணிகள் துவங்க உள்ளது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், நீர்நிலைகளின் கரைகளில் மரக்கன்றுகள் நடும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. பிறகு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகளுக்கு தடுப்பு வைத்து, தண்ணீர் ஊற்றவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், நடவுக்கு பல வகையான மரக்கன்றுகள் தேர்வு செய்யப்ப்டடது. இத்திட்டத்தில் முறையான பராமரிப்பு இல்லாமல், பெரும்பாலான மரக்கன்றுகள் கருகியது. அதே போல், குளங்களின் கரைகளில், பனை மரம் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பனைவிதைகள் நடவு செய்யப்பட்டன. தொடர் கண்காணிப்பு இல்லாததால், பனை மரம் வளர்ப்புத்திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாக மாறியுள்ளது, இந்நிலையில், நடப்பாண்டு பறவைகளுக்கு உதவும் வகையில், பழ வகை மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட, 38 ஊராட்சிகளில் நடவு செய்ய ஊரக வளர்ச்சித்துறையின் போடிபட்டி நாற்று பண்ணையில், 22 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. மா, கொய்யா, சீதா, மாதுளை, நெல்லி உட்பட பழ வகை நாற்றுகளும், வேம்பு, புளி மரக்கன்றுகளும் இப்பண்ணையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசின் 'விக்சித் பாரத்' திட்டத்தின் கீழ், கிராமங்களில் இந்த மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது. திட்டத்தின் கீழ் பணியாளர்கள் ஒதுக்கீடு செய்து, கால்நடைகளால் மரக்கன்றுகள் சேதமடைவதை தடுக்க தடுப்பு அமைப்பதுடன், குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் ஊற்றவும், களைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. உடுமலை பகுதியில் பருவமழை தாமதித்து வருவதால், மரக்கன்றுகள் நடும் பணிகள் தாமதமாகி வருகிறது. இதே போல், குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட 23 ஊராட்சிகளிலும், மடத்துக்குளம் ஒன்றியம், 11 ஊராட்சிகளிலும், மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர் கண்காணிப்பு தேவை இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: கிராமங்களில் பழ வகை மரங்களை பராமரிப்பது பல்வேறு பலன்களை தரும். ஆனால், பராமரிப்பில் உரிய ஆர்வம் காட்டப்படுவதில்லை. நடவுக்கு பிறகு, 'விக்சித் பாரத்' திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் பராமரிப்புக்கு தேவையான பணியாளர்களை ஒதுக்கீடு செய்து, ஒன்றிய அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இத்தகைய தொடர் கண்காணிப்பு மட்டுமே, மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்க உதவும். இல்லாவிட்டால், பருவமழை காலத்துக்குப்பிறகு போதிய பராமரிப்பு இல்லாமல், மரக்கன்றுகள் கருகுவதை தவிர்க்க முடியாது. இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !