தடையை மீறி ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் கைது
திருப்பூர்: திருப்பூரில் தடையை மீறி ஹிந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, 1,000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் நடந்த முருகன் மாநாட்டில் பங்கேற்று பேசிய சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் தமிழக அரசின் நிலையை கண்டித்தும் ஹிந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, மாநகர போலீசுக்கு கடிதம் வழங்கப்பட்டது. அனுமதி வழங்க போலீசார் மறுத்தனர். இதையடுத்து, திருப்பூரில் 20 இடங்களில் ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவிநாசி சாலை புஷ்பா சந்திப்பில், மாநில பொதுச்செயலர் கிஷோர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீசார் அவர்களை கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். தென்னம்பாளையத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் வேலுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வெவ்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் பங்கேற்ற, 200 பெண்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.