நாய்கள் ஆடுகளை வேட்டையாடும் விவகாரம் இழப்பீடு பெற்றுத்தராத அமைச்சர் வீட்டை முற்றுகையிட முடிவு
திருப்பூர்: தெரு நாய்கள் கடித்து, ஆடுகள் பலியாகும் விவகாரம் தொடர்பாக, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வீட்டை முற்றுகையிட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம், காங்கேயம், வெள்ளகோவில், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் தெரு நாய்கள், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை விரட்டி, மூர்க்கத்தனமாக தாக்குவதை பழக்கப்படுத்தி கொண்டு விட்டன. இது, தினசரி நடந்து வரும் நிலையில், இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.கடந்த, 13, 14ம் தேதிகளில் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னிமலை - காங்கேயம் ரோட்டில், பாரவலசு பகுதியில், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி, கைது செய்தனர். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விவசாய அமைப்பினர் கூறியதாவது:தெரு நாய்களால் பலியாகும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில், 45 நாளில் அரசாணை பெற்றுக் கொடுக்கப்படும் என, 2024 நவ., 23ல், கலெக்டர் கடிதம் வழங்கினார். அந்த காலக்கெடு முடிந்த நிலையில், 20 நாளில் அரசாணை பெற்றுக் கொடுக்கப்படும் என, நீட்டித்து மீண்டும் உறுதியளித்தார்.அதுவும் நடக்காத நிலையில், 'இரு நாளில் இழப்பீடு தொடர்பான அரசாணை பெற்றுக் கொடுக்கப்படும்' என, கடந்த, 13ம் தேதி எழுத்துப்பூர்வமாக, காங்கேயம் தாசில்தார் கடிதம் வழங்கினார். அதுவும் நடக்கவில்லை. பொறுமையிழந்த நாங்கள், விவசாயிகளை திரட்டி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வீட்டை முற்றுகையிட உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வெறிநாய் கடித்து 15 பேர் காயம்
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சியில், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு, நகராட்சி நிர்வாகம் தடுப்பூசி போடுவதில்லை. இதனால் ரேபீஸ் நோய் தாக்கி, வெறி பிடித்து நாய்கள் அலைந்து வருகின்றன. நேற்று சோளிங்கர் நகராட்சி பகுதியில் வெறிநாய் ஒன்று, 15 பேரை கடித்து குதறியது. இதில், படுகாயமடைந்த, தமிழ்செல்வி, 23, தனபால், 60, பாரதி, 40, சுலோச்சனா, 60, நரசிம்மன், 58, குமார், 40, உள்ளிட்டோர், சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதே நேரம், வெறி நாய் தப்பியது. வெறிநாயை பிடிக்க, நகராட்சி நடவடிக்கை எடுக்க, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.