உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இரு மாநிலத்தை இணைக்கும் ரோட்டில்... விடிவு எப்போது? கிடப்பில் போடப்பட்ட மேம்பாட்டு திட்டம்

இரு மாநிலத்தை இணைக்கும் ரோட்டில்... விடிவு எப்போது? கிடப்பில் போடப்பட்ட மேம்பாட்டு திட்டம்

உடுமலை;உடுமலை - மூணாறு ரோட்டை முழுமையாக புதுப்பித்து, அபாய வளைவை மேம்படுத்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், இரு மாநில வாகன ஓட்டுநர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.உடுமலையிலிருந்து, சின்னாறு வழியாக மூணாறு செல்லும் ரோடு அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள மூணாறு, சிறந்த சுற்றுலா ஸ்தலமாகும். இங்கிருந்தும், பல்வேறு நகரங்களிலிருந்து இந்த ரோடு வழியாக, மூணாறுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.மேலும்,உடுமலையிலிருந்து, சின்னாறு வழியாக கேரளா மாநிலம் மறையூர், மூணாறுக்கு, ஆனைமலை புலிகள் காப்பகம் வழியாக ரோடு செல்கிறது.சின்னாறு பகுதியில் அமைந்துள்ள மாநில எல்லை வரையிலான, 28.80 கி.மீ., ரோடு, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால், மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த ரோட்டில், மலைப்பகுதியிலிருந்து உருவாகும், சிற்றாறுகள் ரோட்டை கடந்து, அமராவதி அணைக்கு செல்லும் இடங்களில், ரோடு அடிக்கடி சேதமடைகிறது.மேலும், சின்னாறுக்கு முன்பாக அமைந்துள்ள அபாய 'எஸ்' வளைவு பகுதியிலும், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன.மேடான பகுதியில், எதிரே வரும் வாகனங்கள் விலக முடியாத அளவுக்கு, அமைந்துள்ள வளைவில், விபத்துகள் ஏற்பட்டால், இந்த ரோட்டில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விடும்.இந்த வளைவு பகுதியை மேம்படுத்தி, மலைச்சரிவை ஒட்டி, தடுப்புச்சுவர் கட்டி, பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.இந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டால், உடுமலையிலிருந்து மறையூருக்கு, காய்கறி எடுத்து செல்லும் வாகனங்களுக்கும், மருத்துவம் உட்பட தேவைகளுக்காக மறையூரிலிருந்து உடுமலைக்கு வந்து செல்லும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.மேலும், காந்தலுார், மறையூர், மூணாறு சுற்றுலா தலங்களுக்கு உடுமலை வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக வார விடுமுறை நாட்களில், 'எஸ்' வளைவு பகுதியில், அதிக நெரிசல் ஏற்படுகிறது. அப்போது பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணியர் பாதிக்கின்றனர்.எனவே, முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.இது குறித்து நெடுஞ்சாலைத்துறையின் சிறப்பு திட்டங்கள் வாயிலாக நிதி ஒதுக்கி, பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.முன்பு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சின்னாறு வரை ரோடு மேம்பாட்டுக்கு கருத்துரு தயாரித்து அரசின் கவனத்துக்கு அனுப்பினர். ஆனால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், இரு மாநில வாகன ஓட்டுநர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே, இந்த ரோட்டை புதுப்பித்து, மேம்பாட்டு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை, மறையூர் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை