பேரு மட்டும் தான் ஸ்மார்ட் சிட்டி; குழந்தையப்பா நகர் மக்கள் அதிருப்தி
திருப்பூர்; 'ஸ்மார்ட் சிட்டி' அந்தஸ்து பெற்றும், திறந்த வெளி கால்வாய் அவலம் தொடர்கிறது' என, குழந்தையப்பா நகர் குடியிருப்புவாசிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.திருப்பூர் மாநகராட்சி, 39வது வார்டு பாளையக்காடு, குழந்தையப்பா நகரில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.ஊத்துக்குளி மெயின் ரோட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குழந்தையப்பா நகர் வழியாக செல்லும் கால்வாயில் வழிந்தோடி நொய்யல் நதியை சென்றடையும் வகையில், கால்வாய் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கால்வாய் திறந்த நிலையில் இருப்பதால் நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.குடியிருப்புவாசிகள் கூறியதாவது:திருப்பூர் மாநகராட்சி, 'ஸ்மார்ட் சிட்டி' அந்தஸ்து பெற்றிருக்கிறது. மாநகரில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்வாய் கான்கிரீட் தளத்தால் மூடப்பட்டுள்ளன. ஆனால், குழந்தையப்பா நகரில் உள்ள கால்வாய் மட்டும் மூடப்படாமல் உள்ளது.கால்வாய் பலமிழந்துள்ள நிலையில், இந்த கால்வாயை ஒட்டிய சாலையில் தான், பள்ளி பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. சற்று கவனக்குறைவு ஏற்பட்டாலும், கால்வாய் இடிந்து விழும்; விபரீதம் ஏற்படும்.கால்வாய் திறந்த நிலையில் இருப்பதால் கொசு தொல்லையும் அதிகம்; நோய் பரவும் சூழல் உள்ளது. குடியிருப்புவாசிகளும், கால்வாய்க்குள் தான் குப்பைகளை கொட்டுகின்றனர்.'ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கால்வாயை மூட வேண்டும்' என, மாநகராட்சி நிர்வாகத்திடம் வைக்கப்பட்ட கோரிக்கை, நிதி பற்றாக்குறை உள் ளிட்ட காரணங்களை முன்வைத்து, கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, சாக்கடை கால்வாயை புதுப்பித்து, மூடிய நிலையில் மாற்றியமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.