வனத்துறை சார்பில் பாலிதீன் அகற்றும் பணி
திருப்பூர் : வனத்துறை சார்பில், பாலிதீன் அகற்றும் பணி நேற்று நடந்தது; ஒரே நாளில், ஒன்றரை டன் பாலிதீன் சேகரிக்கப்பட்டது.வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு உத்தரவில், வனப்பகுதிகளில் பாலிதீன் குப்பை அகற்றும் பணி மற்றும் அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நேற்று நடந்தது.திருப்பூர் மாவட்டத்தில், அமராவதி வனச்சரகத்துக்கு உட்பட்ட உடுமலை, சின்னாறு செக்போஸ்ட் சாலையில், உடுமலை வித்யாசாகர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், 65 பேர் வனத்துறையினருடன் இணைந்து சாலையோரம் கிடந்த பாலிதீன் குப்பைகளை சேகரித்தனர்.திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலய பகுதியில், ஏ.வி.பி., கல்லுாரி மாணவர்கள், 25 பேர், வனத்துறையினருடன் இணைந்து, பாலிதீன் அகற்றும் பணி மேற்கொண்டனர். அதே போன்று, காங்கயம் பகுதியிலும் பணி நடந்தது.'பாலிதீன் பைகளை பயன்படுத்தக்கூடாது' என்ற விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தினரும் இப்பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.