முன்னேற்பாடுகள் தீவிரம்
ச ட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகள் அதற்கான முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அவ்வகையில், பல்லடம் தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் கல்லுாரியில் நேற்று நடந்தது. ஓட்டுச் சாவடி முதன்மை அலுவலர்கள் மற்றும் ஓட்டுப்பதிவு அலுவலர் - -1 ஆகியோருக்கு காலையிலும், ஓட்டுப் பதிவு அலுவலர், 2 மற்றும் 3 ஆகியோருக்கு மதியமும் பயிற்சி வகுப்பு நடந்தது. ஓட்டுச்சாவடி மையத்தில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்த்தல் மற்றும் தேர்தல் தொடர்பான படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்வது குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் நாரணவரே நேரில் ஆய்வு செய்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் உட்பட, தேர்தல் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.