உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தினமலர் பட்டம் இதழ் சார்பில் வினாடி-வினா: ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி மெட்ரிக் பள்ளி அசத்தல்

 தினமலர் பட்டம் இதழ் சார்பில் வினாடி-வினா: ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி மெட்ரிக் பள்ளி அசத்தல்

உடுமலை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டி, உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவுத்திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி - வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 120 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'எச்' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியர் அபிநேத்ரா, தர்ஷினி ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் கவிபிரியா, ஒருங்கிணைப்பாளர் பர்வின்பாத்திமா, ஆசிரியர்கள் சண்முகசுந்தரி, பிரியா உள்ளிட்டோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். திறன்கள் மேம்படுகிறது! பள்ளி முதல்வர் கவிபிரியா கூறுகையில், ''நாள்தோறும் 'பட்டம்' இதழில் வெளிவரும் தகவல்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாணவர்கள் இதழை வாசிக்கும் போது வாசிப்புத்திறன், அறிவுத்திறன் மேம்பட வழிவகை செய்கிறது. அறிவியல், விளையாட்டு, பொது அறிவு, கணிதம், கதைக்களம் போன்ற துறைகளை பற்றி படிக்கும் போது, உலக நாடுகளே கைக்குள் இருப்பதாக தோன்றுகிறது. உள்ளூர் செய்தி முதல் வெளிநாட்டு செய்திகள் வரை தெரிந்து கொள்ள, 'பட்டம்' இதழ் உதவியாக இருக்கிறது,'' என்றார்.

திறன் வளர்க்க உதவுகிறது

மாணவி அபிநேத்ரா: 'பட்டம்' இதழில், சுவாரசியமான செய்திகள், கவின் உரைகள், அறிவியல் துறையான செய்திகள், பொது அறிவு என கற்க வேண்டிய பாடங்கள் எண்ணற்றவை உள்ளது. வாழ்க்கை பாடங்கள், உலக நிலை, அறிவுத்தி றன், கற்பனைத்திறன்களை வளர்த்துக்கொண்டேன். செய்தி கார்னர், கதைக்களம், நுாற்றுக்கு நுாறு எனக்கு பிடித்த பகுதிகளாகும். செயற்கை நுண்ணறிவு குறித்து தெளிவான கட்டுரைகள் 'பட்டம்' இதழில் வெளியாகிறது. மாணவர் களின் திறன்களை வெளிப்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கிறது. மாணவி தர்ஷினி: 'பட்டம்' இதழ் வாசிப்பதால், நிறைய புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன். புதிய வார்த்தைகள், புராணங்களை தெரிந்து கொள்கிறேன். எனக்கு, செய்தி கார்னர், ரிலாக்ஸ் ப்ளீஸ், காலக்கண்ணாடி, கலைக்கூடம், 'ஏ.ஐ' பாய்ச்சல், பகுதிகள் பிடிக்கும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கிடைக்கிறது. என் சொல்லாற்றலை அதிகப்படுத்தி கொண்டேன். நுட்பமான கருத்துகள் 'பட்டம்' இதழில் அதிகம் இடம் பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ