உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்வியாண்டு முடியும் நிலையிலும் பள்ளிக்கு வராத ஸ்மார்ட் வகுப்புகள்

கல்வியாண்டு முடியும் நிலையிலும் பள்ளிக்கு வராத ஸ்மார்ட் வகுப்புகள்

உடுமலை; மூன்றாம் பருவம் துவங்கியும், அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கப்படாமல் இருப்பதால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.அரசு துவக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்கள் அமைப்பதற்கும் அரசு அறிவித்தது. அதற்கான இணையதள இணைப்பு வழங்கும் பணி முதற்கட்டமாக துவக்கப்பட்டது.இணைய வசதி பயன்பாட்டிற்கான தொகை மாதந்தோறும் அந்தந்த பள்ளிகளுக்கான வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் இணைய வசதி பெற்றிருக்கும் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள், உயர்தர ஆய்வகங்களுக்கான கம்ப்யூட்டர் வசதிகள் அனைத்தும் பெறப்பட்டுள்ளது.அந்த ஸ்மார்ட் போர்டுகளை பொருத்தினால், வகுப்புகளை துவக்கி விடலாம் என்ற நிலையில் பல பள்ளிகள் தயாராக உள்ளன. அரையாண்டு விடுமுறையில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. பல மாதங்களாக தொடரும் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான செயல்பாடுகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில் உள்ளது.இதனால் நடப்பு கல்வியாண்டு முடிந்தாலும், ஸ்மார்ட் வகுப்புகள் வருவதற்கு வாய்ப்பில்லை என பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.பள்ளி மேலாண்மைக் குழுவினர் கூறியதாவது: நடப்பாண்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் தற்போதுள்ள நிலையில், இன்னும் இத்திட்டம் செயல்படுத்தாமல் இருப்பது ஏமாற்றமாகவே உள்ளது. மாணவர்கள் ஆவலுடன் ஸ்மார்ட் வகுப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு தாமதமாவது ஏமாற்றமளிக்கிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ