நெட் மீட்டருடன் சோலார் பேனல் விசைத்தறியாளர் எதிர்பார்ப்பு
பல்லடம்:திருப்பூர் வந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அளித்த மனு:கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் குறைந்த கூலி அடிப்படையில் 90 சதவீதம் விசைத்தறிகள் இயங்குகின்றன. வருமானத்தின் பெரும்பகுதி மின் கட்டணத்திற்கே செலவாகிறது. தற்போது அரசு வழங்கும் மானியத்தால் மின் கட்டணச் சுமையிலிருந்து ஓரளவு தப்பித்து வருகிறோம். விசைத்தறி கூடங்களுக்கு 'நெட் மீட்டர்' வசதியுடன் கூடிய சோலார் பேனல்கள் அமைத்து தந்தால் மின் கட்டண பிரச்னை இன்றி தொழில் நடக்கும். வீடுகளுக்கு வழங்கப்படுவதைப் போன்றே விசைத்தறி கூடங்களுக்கும் 50 சதவீதம் மானியத்துடன் மத்திய, மாநில அரசுகள் சோலார் பேனல்கள் அமைத்து தர வேண்டும். நலிவடைந்துள்ள விசைத்தறி தொழிலைப் பாதுகாக்கும் நோக்கில், முழு விலக்கு அளிக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.