உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிடப்பில் போடப்பட்ட வாரச்சந்தை மேம்பாடு; கொழுமம் மக்கள் அதிருப்தி

கிடப்பில் போடப்பட்ட வாரச்சந்தை மேம்பாடு; கொழுமம் மக்கள் அதிருப்தி

உடுமலை : கொழுமம் வாரச்சந்தையை மேம்படுத்தி, வளாகத்தில் நிரந்தர கடைகள் கட்டி, சுகாதார சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுவாக பல்வேறு கிராம மக்கள், காய்கறி மற்றும் மளிகை பொருட்களை சந்தைகளில் வாங்குகின்றனர். இதற்காக, முக்கிய நகரில் வாரச்சந்தைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.அவ்வகையில்,மடத்துக்குளம் ஒன்றியம், கொழுமத்தில், வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம் உட்பட சுற்றுப்பகுதி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், மக்கள், தங்களுக்கு தேவையான காய்கறிகளை உள்ளூரிலேயே வாங்கவும், இந்த சந்தை பயன்பட்டு வருகிறது.மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள, இந்த சந்தை முறையாக பராமரிக்கப்படாமல், சுகாதார சீர்கேடு நிலவும் பகுதியாக உள்ளது.விற்பனைக்குப்பிறகு காய்கறி கழிவுகள் முறையாக அப்புறப்படுத்துவதில்லை. இதனால், வளாகத்தில், பல இடங்களில், கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.அங்கு வருபவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சந்தையில்,காய்கறி கழிவுகளை உரமாக்கவும் திட்டத்துக்காக கட்டப்பட்ட தொட்டிகள், பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது.

பூட்டியே கடைகள்

ஒன்றிய பொது நிதியின் கீழ், கட்டப்பட்ட நான்கு கடைகள் திறக்கப்படாமல், பூட்டியே கிடக்கிறது. இதனால், திறந்தவெளியில், காய்கறிகளை விற்பனை செய்யும் நிலை உள்ளது.இதே மேற்கூரையுடன் கூடிய கடைகளும், தற்காலிக ஆக்கிரமிப்புகளால், பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. கழிப்பிடமும் பயன்பாட்டில் இல்லை.சுகாதார சீர்கேடுகள் நிரந்தரமாக உள்ளதால், காய்கறி விற்பனை செய்யவும், வாங்கவும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். போதிய இடவசதியுடன், அமைந்துள்ள வாரச்சந்தை முறையான பராமரிப்பு இல்லாமல், வீணாகி வருவதுடன் மேம்பாட்டு பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது அப்பகுதி மக்களை கவலையடைய செய்துள்ளது.சந்தையை சரிசெய்து சீரமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். எனவே,மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாகம், கொழுமம் வாரச்சந்தையில், உடனடியாக சுகாதார சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.காட்சிப்பொருளாக கடைகளை பயன்பாட்டுக்கு திறந்து, கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நிரந்தர கடைகள் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இதனால், சுற்றுப்பகுதி கிராமங்களின் முக்கிய விற்பனை மையமாக கொழுமம் மாறும்; அதிகளவு விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறுவார்கள். இது குறித்து அப்பகுதி மக்கள் சார்பில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும், பல முறை கோரிக்கை மனு அனுப்பியும் பலனில்லை.தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும் இதில் தலையிட்டு, விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ