உள்ளாட்சியில் வரி வசூல் பணி ;100 சதவீதம் இலக்கு எட்ட தீவிரம்
- நமது நிருபர் -தமிழக அரசு நிதி நெருக்கடியால் திணறி வரும் நிலையில், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே, உள்ளாட்சி நிர்வாகங்கள், தடையின்றி தங்கள் பணியை தொடர, வரி வருவாயை ஸ்திரத்தன்மையுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, 14 பேரூராட்சிகள் மற்றும், 265 ஊராட்சிகள் உள்ளன. பல உள்ளாட்சி நிர்வாகங்கள் வரி வசூலில், பின்தங்கியுள்ளன எனவும், அதற்கான காரணம் கேட்டு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.வரி வசூலுக்கு சிறப்பு முகாம் நடத்த வேண்டும்; வரி வசூலில் பின்தங்கியுள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் சிறப்பு முகாம் நடத்தி, தீவிர வரி வசூலில் முனைப்புக்காட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி, வரி வசூலிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:தற்போது, வரி வசூல் பணியை எளிமையாக்க 'ஆன்லைன்' வாயிலாகவும், யு.பி.ஐ., கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றின் வாயிலாகவும் வரி தொகை செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் வீட்டில் இருந்த படியே வரி செலுத்திக்கொள்ளலாம். மொபைல் வாகனம் வாயிலாக ஒவ்வொரு வார்டாக சென்று, வரி வசூலிக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இன்னும், 5 நாட்களில், அதாவது, 31ம் தேதிக்குள், நுாறு சதவீதம் வரி வசூல் பணியை முடித்தாக வேண்டும் என்ற சூழலில், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது.நிர்ணயிக்கப்பட்ட தேதி முடிந்தும் வரி செலுத்தாதவர்களின் வீடு, நிறுவனம் ஆகியவற்றின் குடிநீர் குழாய் துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.