உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தங்கு தடையின்றி பாலிதீன் புழக்கம்.. கட்டுப்படுத்தப்படாத புகை பழக்கம்..  அரசுத்துறைகள் ஒருங்கிணைந்தால் மட்டுமே தீர்வு

தங்கு தடையின்றி பாலிதீன் புழக்கம்.. கட்டுப்படுத்தப்படாத புகை பழக்கம்..  அரசுத்துறைகள் ஒருங்கிணைந்தால் மட்டுமே தீர்வு

திருப்பூர்: 'திருப்பூரில் தடை செய்யப்பட்ட பாலிதீன், தடையின்றி புழங்குகிறது. தடையை மீறி புகை பிடிக்கும் செயலிலும் பலர் ஈடுபடுகின்றனர். 'இத்தகைய அத்துமீறல்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அனைத்து துறைகளுக்கும் வழங்கினால் தான், அத்துமீறல்களுக்கு முடிவு கட்ட முடியும்' என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. திருப்பூரில் சுற்றுச்சூழல் பிரச்னை என்பது, விஸ்வரூபம் எடுத்து வருகிறது. உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில், ஆண்டாண்டு காலமாய் குப்பைக்குழி உள்ளிட்ட இடங்களில் கொட்டப்படும் குப்பைகளில், தடை செய்யப்பட்ட பாலிதீன் பை வகையறாக்கள் மண்ணில் மக்காமல், கழிவுக்குவியலாக தேங்கி கிடக்கிறது. இதனால், மண் வளம், நீர்வளம் மாசுபடுகிறது. இருப்பினும், பாலிதீன் புழக்கத்தை கட்டுப்படுத்த திட்டமிடல் வகுக்ககப்படவில்லை. சிறிய பெட்டிக்கடை துவங்கி அனைத்து கடைகளிலும், சர்வ சாதாரணமாக பாலிதீன் புழங்குகிறது. பகையாகும் 'புகை' அதே போன்று, கடைகள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்களில் பீடி, சிகரட் புகைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிராமப்புறங்களில் உள்ள டீக்கடைகளில், பீடி, சிகரட் விற்கப்படுவதுடன், கடைக்குள் அமர்ந்த புகைக்கவும் கடைக்காரர்கள் அனுமதிக்கின்றனர். புகை பிடிப்பவர்கள் ஊதித்தள்ளும் புகை, அவர்களை மட்டுமின்றி, அருகே அமர்ந்துள்ளவர்களையும் பாதிக்கிறது. புகை பிடிப்பவர்களை விட, அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு தான் தீங்கு அதிகம்; ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. 'கடிவாளம்' போடுவது யார்? கடைகளில் பாலிதின் புழக்கம் மற்றும் புகைப்பிடிக்கும் செயல்களை கண்காணித்து தடுப்பது, அவற்றை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட பணிகளை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் என, அந்தந்த எல்லைக்குட்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் தான் மேற்கொள்ள வேண்டும்.ஆனால், 'உள்ளாட்சி நிர்வாகங்களில் போதியளவு பணியாளர்கள் இல்லை; இருக்கின்ற பணியாளர்களுக்கும் பல்வேறு பணிகள் பகிர்ந்து வழங்கப்படுவதால், பாலிதீன் விவகாரத்தில் கவனம் செலுத்த முடிவதில்லை. கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை, ஊராட்சி செயலர்கள் மட்டுமே இப்பணிகளை கவனிக்க வேண்டியுள்ளது; அவர்களுக்கு ஏற்கனவே, நிர்வாகம் சார்ந்த பணிச்சுமை அதிகம் என்பதால் பாலிதின் கண்காணிப்பு, புகை பிடிக்கும் செயலை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சாத்தியமில்லை' என உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். ஒருங்கிணைவதே சிறந்த தீர்வு அலுவலர் பற்றாக்குறை என்ற சவாலை சமாளிக்க, களப்பணியில் ஈடுபடும் அரசுத் துறையினரை ஒன்றிணைக்க வேண்டும். அதாவது, உள்ளாட்சி துறையினர் மட்டுமின்றி, நெடுஞ்சாலைத்துறையினர், குடிநீர் வடிகால் வாரியத்தினர், மாசுக்கட்டுப்பாடு வாரியம், மின் வாரியம், காவல் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்கள் தங்கள் துறை சார்ந்த பணிகளை சாலைகள், குடியிருப்பு பகுதிகள், தொழிற்கூடங்கள் உள்ள இடங்களில் தான் மேற்கொள்கின்றனர். தங்களது துறை சார்ந்த பணியின் போது, அந்தந்த பகுதியில் உள்ள கடைகளில் எதேச்சையாக கண்காணித்தாலே அங்கு பாலிதின் புழக்கம் இருக்கிறதா, யாரேனும் புகை பிடிக்கின்றனா என்பதை அறிந்துக் கொள்ள முடியும்; உடனடியாக அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கவும் முடியும்; பொருட்களை பறிமுதல் செய்யவும் முடியும். இப்பணிக்கென, அவர்கள் தனியாக மெனக்கெட வேண்டியதில்லை; தங்களின் அன்றாட அலுவலின் இடையில் இத்தகைய பணியை அவர்கள் மேற்கொள்வது எளிதுதான். அவ்வாறு, அனைத்து துறையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள், இத்தகைய பணிகளை கொண்டு வருவதன் வாயிலாக அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியும். இத்தகைய பணியில் சிறப்பாக செயல்படும் அரசுத்துறையினருக்கு, ஒவ்வொரு சுதந்திர, குடியரசு தினத்தன்று, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு சான்று வழங்கி ஊக்குவிக்கலாம்.- உள்ளாட்சித்துறை அலுவலர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ