சி.ஏ., மாணவர்களுக்காக சிந்தனை செய் கருத்தரங்கு
திருப்பூர்; இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம், திருப்பூர் கிளை மற்றும் மாணவர் கல்வி இயக்கம் சார்பில், மாநில அளவிலான மாணவர்கள் கருத்தரங்கு, 'சிந்தனை செய் -2025' நேற்று துவங்கியது.திருப்பூர் கிளை அரங்கில் நடந்த நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று, மாணவர்கள் மற்றும் ஆடிட்டர்கள் கலந்தாய்வு நடந்தது. மாணவர்கள் கல்வி, பயிற்சி, தொழில்துறை வளர்ச்சி மற்றும் தேர்வு கட்டமைப்பு குறித்து விளக்கப்பட்டது.திருப்பூர் கிளை தலைவர் தருண் தலைமை வகித்தார். செயலர் சபரிஷ், அமைப்பு தலைவர் விஷ்ணுகுமார் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் வரவேற்றார்.ரோட்டரி மாவட்ட முன்னாள் கவர்னர் கார்த்திகேயன், தென்மண்டல உறுப்பினர் அருண் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருத்தரங்கை துவக்கி வைத்து, சிறப்புரை ஆற்றினர்.சென்னையை சேர்ந்த சுந்தர்ராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்; 'பாலன்ஸ் ஷீட்டில் இருந்து பாரதம் வரை', தேசிய கட்டுமானத்தில் சி.ஏ.,வின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.முன்னதாக, மாநாட்டு மலரை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர். இரண்டு நாள் நடக்கும் கருத்தரங்கு, 'சி.ஏ.,' மாணவர்களின் தொழில்துறை திறனை மேம்படுத்தவும், 'சி.ஏ.,' மன்றத்துடன் நெருங்கிய தொடர்பை வளர்க்கவும் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளதாக, ஆடிட்டர்கள் தெரிவித்துள்ளனர்.