உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை பிரதமர் மோடி பொதுக்கூட்டம் :பல்லடத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு

நாளை பிரதமர் மோடி பொதுக்கூட்டம் :பல்லடத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு

பல்லடம்:பல்லடத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூரில், 1,400 ஏக்கர் பரப்பளவில், பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண்; என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா மற்றும் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பொதுக்கூட்டம் ஆகியன நாளை நடக்கின்றன. மூன்று கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூட்டம் நடக்கவுள்ள மைதானத்தை சுற்றி, 5 கி.மீ., துாரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.பொதுக்கூட்டம் நடக்கும் மைதானம், ஏற்கனவே மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்குப் பின்பே பொதுக்கூட்ட மேடைக்கு யாராக இருந்தாலும் அனுமதிக்கப்படுகின்றனர். பிரதமரின் வருகைக்காக பிரத்யேக 'ஹெலிபேடு' மற்றும் நடைபாதை அமைக்கும் பணி நேற்று முன்தினமே நிறைவடைந்தது. நேற்று காலை, சூலுாரில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, மாநாடு நடக்கும் இடத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 4,550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நேற்று முன்தினமே போலீசார் வரவழைக்கப்பட்டனர்; யாருக்கு எங்கு பணி ஒதுக்குவது என்பது குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, பணிகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. உளவுத்துறை போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுக்கூட்ட மைதானத்தைச் சுற்றி, 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுக்கூட்ட நாளன்று தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும், தீவிர சோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்பட உள்ளனர். அவசர நிலை கருதி, 10 தீயணைப்பு வாகனங்கள், 30 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு வசதிகள்

பொதுகூட்ட மேடை, 80 அடி நீளம், 40 அடி அகலம், 8 அடி உயரத்துக்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மதியம், 2:10 மணிக்கு பிரதமர் மேடைக்கு வருகிறார்.மேடைக்கு எதிரே, 650 அடி அகலம், 25 அடி உயரத்தில் பார்லிமென்ட் வடிவில் 'பிளக்ஸ்' அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கடலுாரில் இருந்து குழுக்கள் வந்துள்ளன. 20 ஆயிரம் போக்கஸ் லைட்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தொண்டர்களுக்கு உணவு வழங்கும் வகையில், ஐந்து இடங்களில் 'செட்' அமைக்கப்பட்டுள்ளது. 200 தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி, சரியாக, மதியம் 2:10 மணிக்கு பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார். ஹெலிபேடில் இருந்து மேடை வரை ஒரு கி.மீ., துாரம் மெட்டல் ரோடு அமைக்கப்பட்டு, அதன் மேல் 'மேட்' விரித்துள்ளனர். திறந்தவெளி வாகனம் மூலம் தொண்டர்களை பார்த்த படி, பிரதமர் வரும் வகையில் பிரத்யேக நடைபாதையாக இது அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்திருப்பர். இவ்வாறு பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை என்கின்றனர். 50 பெரிய திரைகளுடன் கூடிய எல்.இ.டி., 'டிவி'க்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. ஒரு மணி நேரம் சிறப்புரை ஆற்றும் பிரதமர், 3:45 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். மத்திய அமைச்சர் முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உட்பட, மாநில நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி வருகையொட்டி இன்றும், நாளையும் திருப்பூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா விடுத்துள்ள அறிக்கை: பிரதமர் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்ட எல்லையில் 26 மற்றும் 27ம் தேதிகளில்(இன்றும், நாளையும்) எவ்வித ட்ரோன்களோ, ஆளில்லா வான்வழி வாகனங்களோ பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ