ஆத்து பக்கம் போய் வர முடியல; வசதியின்றி தவிக்கும் பக்தர்கள்
உடுமலை; கொழுமம் அமராவதி ஆற்றங்கரையில், நீராடவும், திருவிழா காலங்களில், ஆற்றுக்கு சென்று வரவும், தேவையான கட்டமைப்பு வசதிகளை ஹிந்து அறநிலையத்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் இணைந்து மேம்படுத்த வேண்டும்.மடத்துக்குளம் தாலுகா, அமராவதி ஆற்றங்கரையில், பழமை வாய்ந்த சிவாலயங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, சுற்றுக்கோவில் எனப்படும் கொமரலிங்கம் காசி விஸ்வநாதர், கொழுமம் தாண்டேஸ்வரர் கோவில்கள் பிரசித்தி பெற்றதாகும்.முக்கிய விசேஷ நாட்களில் இக்கோவில்களுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி, அமாவாசை உள்ளிட்ட நாட்களில், முன்னோர்களுக்கு திதி கொடுக்க பக்தர்கள் திரளாக வருகின்றனர். ஆனால், அப்பகுதியில், போதிய வசதியில்லாமல், பக்தர்கள் பாதிக்கின்றனர்.கோவில் அருகில் கட்டப்பட்ட படித்துறையில் அமர்ந்தே திதி கொடுக்கும் நிலை உள்ளது. படித்துறைக்கும், ஆற்றுக்கும் உள்ள இடைவெளி, சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால், பக்தர்கள் நீராடவும், அப்பகுதிக்கு சென்று வரவும் சிரமப்படுகின்றனர்.திதி கொடுப்பதற்கு தனியாக இடம் ஒதுக்கி, கட்டட வசதியை ஏற்படுத்த வேண்டும்.பக்தர்கள் பாதுகாப்பாக ஆற்றங்கரைக்கு செல்ல கான்கிரீட் கரை அமைக்க வேண்டும்.இதே போல், கொழுமம் தாண்டேஸ்வரர் கோவிலில் இருந்து, ஆற்றங்கரைக்கு செல்வதற்கான வழித்தடம், மோசமான நிலையில் உள்ளது. அங்கும் படித்துறை ஏற்படுத்துவது அவசியமாகும்.இதே போல், கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, தீர்த்தம் எடுத்தல், பூவோடு எடுத்தல் என பல்வேறு வேண்டுதல்களுக்காக, பக்தர்கள் அமராவதி ஆற்றுக்கு செல்கின்றனர். ஆனால், பராமரிப்பில்லாத, சுகாதாரமில்லாமல் காணப்படும் வழித்தடத்தில் செல்ல பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.எனவே, ஹிந்து அறநிலையத்துறையினரும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினரும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டும்.