ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் திறப்பு; மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
உடுமலை; திருமூர்த்தி அணையிலிருந்து, ஆலாம்பாளையம் குளத்திற்கு நேற்று நீர் திறக்கப்பட்டது. இதனால், விவசாயிகள், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில், 76 ஏக்கர் பரப்பில், அமைந்துள்ள பூசாரிநாயக்கன் குளம், சுற்றுப்புறத்திலுள்ள குறிச்சிக்கோட்டை, மடத்துார், குரல்குட்டை, மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, உரல்பட்டி என பல்வேறு கிராமங்களுக்கு, நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.இக்குளத்துக்கு முன்பு, மழை நீர் ஓடைகள் வாயிலாக, திருமூர்த்தி பாலாறு வழியாக நீர் வரத்து கிடைத்து வந்தது. திருமூர்த்தி அணை, பி.ஏ.பி., திட்டம் உருவாக்கப்பட்டதால், குளத்திற்கு நீர்வரத்து முற்றிலும் தடைபட்டது.இதனையடுத்து, அப்பகுதி விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களுக்கு பின், கடந்த, 2012 முதல், பி.ஏ.பி., துணை அமைப்பாக இக்குளம் சேர்க்கப்பட்டு, ஆண்டுக்கு, 39.86 மில்லியன் கனஅடி நீர் வழங்க அரசு உத்தரவும், உயர் நீதிமன்ற உத்தரவும் உள்ளது.அதன் அடிப்படையில், கடந்த, ஏப்., 7ம் தேதி முதல், 9ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு, 20 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது. பி.ஏ.பி., விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீர் திறக்க அதிகாரிகள் மறுத்தனர். பூசாரிநாயக்கன் குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.இந்நிலையில், நேற்று முதல், நாளை வரை, மூன்று நாட்களுக்கு, 20 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், திருமூர்த்தி அணை பொது கால்வாய்,1.20 கி.மீ.,ல் பிரியும் உடுமலை கால்வாயில், 5.130 கி.மீ.,ல் அமைந்துள்ள, மானுப்பட்டி கிளை கால்வாய், 2.65 வது கி.மீ.,ல் அமைந்துள்ள மதகு வழியாக பூசாரிநாயக்கன் குளத்திற்கு நீர் திறக்கப்பட்டது.