கழிவு பஞ்சு விலை குறையுமா? ஓ.இ. மில்கள் காத்திருப்பு
திருப்பூர்:பஞ்சு விலை குறைந்துள்ளதால், கழிவு பஞ்சின் விலையும் குறைக்கப்பட வேண்டும் என ஓ.இ. மில்கள் வலியுறுத்தியுள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இயங்கும் 200-க்கும் மேற்பட்ட ஓ.இ. மில்கள், ஸ்பின்னிங் மில்களில் இருந்து கிடைக்கும் கழிவு பஞ்சை பயன்படுத்தி நுால் தயாரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மின்கட்டணம், சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகள் 200 முதல் 465 சதவீதம் வரை உயர்ந்துள்ள நிலையில், காடா துணிக்கு போதிய விலை கிடைக்காததால் தொழில் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த மே மாதத்தில் கிலோ 145-147 ரூபாய் வரை கழிவு பஞ்சு விலை உயர்ந்திருந்தது. தற்போது பஞ்சு விலை சரிந்துள்ளது. நஷ்டம் தவிர்க்க கிலோ 115-118 ரூபாய் வரை மட்டுமே கழிவு பஞ்சை வாங்க முடியும் என ஓ.இ. மில்கள் தெரிவித்துள்ளன. மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் கூறுகையில், ''பஞ்சு இறக்குமதி வரி விலக்கு குறித்து மத்திய அரசு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்; சி.சி.ஐ. போல கழிவு பஞ்சுக்கும் விலை நிர்ணய முறை கொண்டு வர வேண்டும்; மேலும், கழிவு பஞ்சுக்கான பேக்கிங் கட்டணத்தை ரத்து செய்து, காடா பொருட்களுக்கு நியாயமான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்'' என்றார். -- ஜெயபால்.