கையை கிழித்துக் கொண்ட ரவுடி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு
திருச்சி:போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த ரவுடி, பிளேடால் கையை கிழித்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி, கே.கே.நகர் அருகே உள்ள சாத்தனுாரைச் சேர்ந்தவர் ரவுடி கோபிநாத், 22. இவர் மீது திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்மையில் நடந்த வழிப்பறி வழக்கில் கைதான கோபிநாத்தை, கே.கே.நகர் போலீசார் பிடித்து, போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக நேற்று முன்தினம் இரவு வைத்திருந்தனர்.அப்போது, ஸ்டேஷனில் இருந்த பிளேடை எடுத்து தன் கையை கோபிநாத் கிழித்துக் கொண்டார். பதறிப்போன போலீசார், உடனடியாக கோபிநாத்தை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். நேற்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.