காரில் பதுங்கிய பாம்பு போராடி பிடித்த வீரர்கள்
திருச்சி:மணப்பாறையில் காரின் இன்ஜின் அருகே பதுங்கிய பாம்பை, தீயணைப்பு படையினர் லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் விட்டனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை மதுரை ரோட்டில் வசிப்பவர் ஆனந்த். இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரை, நேற்று காலை, டிரைவர் எடுக்கச் சென்றபோது, காருக்கு அடியில் சென்ற, 4 அடி நீள சாரைப்பாம்பு, இன்ஜின் பகுதியில் புகுந்தது. இதைக் கண்ட டிரைவர், மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் தேடியும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து, பாம்பு புகுந்த அந்த காரை சர்வீஸ் ஸ்டேஷன் எடுத்துச் சென்று, லிப்ட் மூலம் உயர்த்தி, காரை சோதனை செய்தனர். அப்போது பதுங்கியிருந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள், அந்த பாம்பை லாவகமாகப் பிடித்து, வனப்பகுதியில் விட்டனர். இதனால், அப்பகுதியில் நான்கு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.