கோவில் தேர் வெள்ளோட்டம் தடம் புரண்டதால் அதிர்ச்சி
திருச்சி: திருச்சி, திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலின் தேர்கள் பழுதடைந்ததால், 3.50 லட்சம் ரூபாய் செலவில் புனரமைத்தனர். தேர்களின் வெள்ளோட்டம் நேற்று காலை நடந்தது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வடம் பிடித்தனர். ஜம்புகேஸ்வரர் தேர் சிறிது துாரம் இழுக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டது. அம்மன் தேரானது, வடக்கு ரத வீதியில் சென்றபோது, அச்சாணி விலகி தேர் தடம் புரண்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இரு பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, தேர் நிலை நிறுத்தப்பட்டது. மீண்டும் தேர் சரி செய்யப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தேரை புனரமைத்தபோது, கோவில் நிர்வாகம் அலட்சியத்தால் தான் இது நடந்துள்ளது என, பக்தர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.