உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பழமையான கல்வெட்டு: ஆலகிராமத்தில் கண்டெடுப்பு

பழமையான கல்வெட்டு: ஆலகிராமத்தில் கண்டெடுப்பு

விழுப்புரம்; கூட்டேரிப்பட்டு அடுத்த ஆலகிராமத்தில் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு அடுத்த ஆலகிராமத்தில், பழமைவாய்ந்த எமதண்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மண்ணுக்குள் புதைந்திருந்த 3 துண்டு கல்வெட்டுகள், தற்போது வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்த, விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:எமதண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் கண்டறியப்பட்டுள்ள முதல் துண்டு கல்வெட்டில் உள்ள வாசகங்களை காணும்போது, இவை சோழ மன்னனான விக்கிரம சோழனைக் குறிப்பிடும் மெய்க்கீர்த்தி வாசகங்கள் எனத் தெரிய வருகிறது. கல்வெட்டு துண்டு துண்டாக இருப்பதால், இதன் ஆண்டு உள்ளிட்ட விவரங்களை அறிய முடியவில்லை.விழுப்புரம் மாவட்டத்தில் சித்தலிங்கமடம், பிரம்மதேசம், திருவாமாத்துார் உள்ளிட்ட இடங்களில் கி.பி.1120ம் ஆண்டு முதல் 1133ம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில், விக்கிரம சோழனின் கோவில் திருப்பணிகள் நடந்துள்ளன. இதே காலத்தில், 900 ஆண்டுகளுக்கு முன்பு ஆலகிராமம் பகுதியிலும், திருப்பணிகள் நடைபெற்றிருக்கலாம். ஆலகிராமத்தில் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட துண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், வட்டெழுத்துடன் கூடிய விநாயகர், பல்லவர் கால லகுலீசர், ஐயனார் உள்ளிட்ட சிற்பங்கள், இப்பகுதியில் அமைந்துள்ளன.இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை