செம்படை வாய்க்கால் சீரமைத்த பொதுமக்கள்
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கல்பட்டு ஏரிக்கு தண்ணீர் செல்லும் செம்படை வாய்க்காலில் உள்ள புதர்களை கிராம மக்கள் சீரமைத்தனர்.விழுப்புரம் அடுத்த கல்பட்டு ஏரிக்கு தண்ணீர் வரும் செம்படை வாய்க்கால், இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனால், பருவமழை காலத்தில் ஏரிக்கு தண்ணீர் வருவது தடைப்பட்டது.மழைக் காலம் துவங்கும் முன், ஆக்கிரமிப்புகளை அகற்றி, கல்பட்டு ஏரிக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், ஆசிரியர் கல்வராயன், அண்ணாதுரை, ரங்கநாதன், குப்புசாமி, ராமமூர்த்தி ஆகியோர், ஊராட்சி தலைவர் அஸ்வினி தமிழ்ஒளி ஒத்துழைப்போடு, கிராம மக்களின் உதவியோடு, செம்படை வாய்காலை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 1 கி.மீ., துார வாய்க்காலில் உள்ள புதர்களை அகற்றினர்.தற்போது இந்த வாய்க்கால் சீரமைக்கப்பட்டதன் மூலம், பருவமழை துவங்கும் போது இதில் வரும் தண்ணீர் கல்பட்டு ஏரிக்கு சென்று அதன் மூலம் 1000 ஏக்கரில் விவசாய பாசனம் செழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.