திண்டிவனம் அரசு பெண்கள் பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆய்வு
திண்டிவனம் : திண்டிவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாநில பள்ளிக்கல்வி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.திண்டிவனம், முருங்கம்பாக்கத்தில், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் அதே வளாகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாநில பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் நேற்று காலை 11:00 மணிக்கு திடீர் ஆய்வு செய்தார்.அப்போது, பள்ளி வளாகத்தில் இருந்து திண்டிவனம் கல்வி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான இலவச பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணியை ஆய்வு செய்தார்.மழை பெய்து வருவதால் பாட புத்தகங்களை தார்பாய் போட்ட வாகனங்களில் ஏற்றி செல்ல அறிவுறுத்தினார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மாணவிகளுக்கு வழங்கி சேர்க்கையை துவக்கி வைத்தார். பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்துக்கொள்ள ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறினார். விழுப்புரம் மாவட்ட முதன்மை அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் சிவசுப்ரமணியன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், திண்டிவனம் கல்வி மாவட்ட அதிகாரி அருள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா உடனிருந்தனர்.