உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சத்துணவு மையங்களில் 1,892 பணியிடங்கள் காலி:பணியாளர்கள் நியமிக்கப்படுவது எப்போது?

சத்துணவு மையங்களில் 1,892 பணியிடங்கள் காலி:பணியாளர்கள் நியமிக்கப்படுவது எப்போது?

-நமது நிருபர்- விழுப்புரம் மாவட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களில், 2,676 பணியாளர்கள் தற்போது பணியில் உள்ளனர். 1,892 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கு, அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சியின்போது, பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டம் துவங்கப்பட்டது. கடந்த 1982ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி ஊரக பகுதிகளிலும், ஆகஸ்ட் 15ம் தேதி நகர பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டது. பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வகை செய்தல். ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச் சத்துமிக்க உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துதல். பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தவிர்த்தல் உள்ளிட்ட நோக்கத்தின் அடிப்படையில், சத்துணவு திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டம், தமிழகம் முழுவதும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்காக துவங்கப்பட்டது. அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்கள். 2 நகராட்சிகளின் கீழ் 1,500க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களில் மதிய உணவு சமைக்கப்படுகிறது. கடந்த 2025-2026ம் நிதி ஆண்டில், மாவட்டத்தில் உள்ள 67 ஆயிரத்து 612 மாணவர்கள், 67 ஆயிரத்து 413 மாணவியர்கள் உட்பட மொத்தம் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 25 பேருக்கு சத்துணவு வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில், 1,508 சத்துணவு அமைப்பாளர்கள், தலா 1,230 சமையலர் மற்றும் உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். இதில், தற்போது 847 சத்துணவு மைய அமைப்பாளர்கள், 1,259 சமையலர்கள், 570 உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மாவட்டம் முழுதும் 661 மைய பொறுப்பாளர்கள், 271 சமையலர்கள், 960 உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதில், இழுப்பறி நிலை தொடர்கிறது. மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் அரசால் அனுமதிக்கப்பட்ட 4,568 பணியாளர்களில், தற்போது 2,676 பணியாளர்கள் மட்டுமே, பணியில் உள்ளனர். மொத்தம் 1,892 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !