புதிய தாழ்தள சொகுசு பஸ் இயக்கம்
விழுப்புரம் ; விழுப்புரத்தில் புதிய தாழ்தள சொகுசு பஸ் இயக்கம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் மற்றும் பொது மக்கள் எளிதில் பயணிக்கும் வகையில், புதிய தாழ்தள சொகுசு பஸ் நேற்று முதல் இயக்கப்பட்டது. இந்த புதிய பஸ்களை, மஸ்தான் எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெயசங்கர், துணை மேலாளர் (வணிகம்) சிவக்குமார், துணை மேலாளர் (தொழில்நுட்பம்) அறிவண்ணல், துணை மேலாளர் (விழுப்புரம் பஸ் நிலையம்) ரமேஷ், உதவி மேலாளர் (இயக்கம்) சிவராமன் உட்பட கிளை மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், போக்குவரத்து பணியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த புதிய தாழ்தள சொகுசு பஸ், விழுப்புரம் - வில்லியனுார், பண்ருட்டி, செஞ்சி, வேட்டவலம் ஆகிய வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.