உளுந்துார்பேட்டை விமான ஓடுபாதை ட்ரோன் உற்பத்திக்கு வழங்க கோரிக்கை
விழுப்புரம் : உளுந்துார்பேட்டை விமான ஓடுபாதை நிலத்தை, தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென மத்திய அமைச்சரிடம் விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தினார்.இதுகுறித்து அவர் நேற்று டில்லியில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உளுந்துார்பேட்டை விமான ஓடுதளம், தற்போது தஞ்சாவூர் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி, அதிநவீன விமான சோதனை ஆய்வகம், விமானப் பயிற்சி பள்ளி மற்றும் ட்ரோன் உற்பத்தி பூங்காவாக மாற்றுவதற்காக தமிழக அரசு (டிட்கோ) மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இடையே ஒரு கூட்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த விமான ஓடுதளம் சென்னை விமான நிலையத்திலிருந்து வடக்கே சம துாரத்திலும், தஞ்சாவூர் விமான நிலையம் மற்றும் திருச்சி விமான நிலையம் தெற்கே சம துாரத்திலும் அமைந்துள்ளது. இது விமான சோதனை, பைலட் பயிற்சி மற்றும் ட்ரோன் பறப்பதற்கு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அனுமதிகளை எளிதாக்குகிறது.எனவே, விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, உளுந்துார்பேட்டை விமான ஓடுபாதை உள்ள நிலத்தை, தமிழக அரசிடம் விரைந்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.