திண்டிவனம் மேம்பாலத்தில் கடைகளால் விபத்து அபாயம்
திண்டிவனம் : திண்டிவனம் மேம்பாலத்தின் மேல்பகுதியில் விபத்து ஏற்படும் வகையில் சாலையோர கடைகள் வைக்கப்பட்டுள்ளது.திண்டிவனத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. நான்கு வழிகளிலிருந்து வரும் வாகனங்கள் நகர பகுதிக்குள் வராமல், மேம்பாலம் வழியாக செல்வதற்காக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.மேம்பாலத்தின் மேல்பகுதியில் ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றக்கூடாது போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோர கடைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கும்படி போலீசார், போக்குவரத்து போலீசாருக்கு சப் கலெக்டர் அறிவுறுத்தியிருந்தார்.ஆனால், மேம்பாலத்தின் மேல்பகுதியில், போக்குவரத்து போலீசார் கண்டித்தும் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்வது தொடர்கிறது.இதேபோல், மேம்பாலத்தின் மைய பகுதியில் இரு பக்கமும் வியாபாரிகள் பழம், பூ உள்ளிட்ட பொருட்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.மேம்பாலத்தில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி பொருட்களை வாங்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.சப் கலெக்டர் உத்தரவை மீறி நடக்கும் விதி மீறல்களை திண்டிவனம் போலீசார் மற்றும் போக்குவரத்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.