உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குழு செயல்பாடு... சபாஷ்!சப் டிவிஷனுக்கு ஒரு படையை ஏற்படுத்தப்படுமா? 

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குழு செயல்பாடு... சபாஷ்!சப் டிவிஷனுக்கு ஒரு படையை ஏற்படுத்தப்படுமா? 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தீவிர செயல்பாடு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஒரே ஒரு குழுமட்டுமே உள்ளதால், நெருக்கடியை தவிர்க்க சப் டிவிஷனுக்கு ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக த.வெ.க., அரசு சார்பில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 9ம் தேதி சென்னை எழும்பூரில் நடந்த விழாவில், இந்த சிறப்பு பிரிவை முதல்வர் விஜய் துவக்கி வைத்தார். சென்னை மாநகரில் 12 இடங்களில் இக்குழு துவங்கப்பட்டது. பிறகு, அனைத்து மாவட்டங்களிலும் இக்குழு துவக்கி வைக்கப்பட்டது. இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு தனி லோகோ, சீருடை, ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது. 1091 என்ற தொலை பேசி எண்ணில் இப்படையை மக்கள் தொடர்பு கொள்ளலாம். ஐ.ஜி., பவானீஸ்வரி கண்காணிப்பில் இக்குழு துவங்கி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், மாவட்டங்கள் தோறும் தலா ஒரு சிறப்பு அதிரடிப்படை வீதம் 70 இடங்களில் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அதிரடிப்படை துவங்கி தீவிர செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் பிரபாவதி, சற்குணம் ஆகியோர் தலைமையில், இந்த சிறப்பு அதிரடிப்படை இயங்குகிறது. 2 சப் இன்ஸ்பெக்டர்கள், 4 மகளிர் காவலர்கள், 2 டிரைவர்கள் என 8 பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 24 மணி நேரமும் செயல்படும் இந்த பிரிவில், சுழற்சி அடிப்படையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 காவலர்கள், ஒரு டிரைவர் ஈடுபடுகின்றனர். விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் இந்த பிரிவு இயங்குகிறது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார், தினசரி வரும் மொபைல்போன் புகார், (1091 அவசர அழைப்பு) தகவல்களை வாங்கி அந்த இடத்திற்கு சென்று விசாரிப்பது, பிரச்னைகளை தீர்ப்பது, குற்றம் நடந்திருந்தால் தொடர்புடையவர்களை பிடித்து வந்து, அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைக்கின்றனர். காவல் நிலையம் மூலம் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்கள், பெண் குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள், கேலி செய்பவர்கள், வீண் தகராறில் ஈடுபடுபவர்கள், பொது இடங்களில் தவறாக நடப்பவர்கள் குறித்து வரும் புகார்கள், தகவல்கள் மீது உடனடியாக இக்குழு நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சிறப்பு படையின் நடவடிக்கை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சிறப்பு படையினர், பள்ளி, கல்லுாரிகளுக்குச் சென்று, மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், தினசரி காலை, மாலை நேரங்களில் பஸ் நிலையங்கள், முக்கிய பஸ் நிறுத்த சந்திப்புகளில் நின்று பாதுகாப்பு வழங்குவது, அங்குள்ள பெண்கள், மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கூடுதல் படை அவசியம் மாவட்டத்தில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு ஒரு குழு மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் செயல்படும் இவர்கள் மாவட்டம் முழுவதும் பணியாற்ற வேண்டிய நெருக்கடி உள்ளது. தினசரி அவசர அழைப்புகள், புகார்கள் என மாவட்டம் முழுவதும் வருகிறது. அந்த நேரங்களில் ஒரே ஒரு ரோந்து வாகனமும், ஒரே ஒரு குழு மட்டுமே உள்ளதால், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனுார், வானுார், கோட்டக்குப்பம் என நெடுந்தொலைவுக்கு சென்று வர இயலாத நிலை உள்ளது. இதனால், விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம், செஞ்சி, விக்கிரவாண்டி ஆகிய போலீஸ் சப் டிவிஷன்களுக்கு தலா ஒரு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை ஏற்படுத்த வேண்டும். அதே போல், கூடுதல் போலீசாரையும், கூடுதல் ரோந்து வாகனங்களையும் வழங்கினால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Krishna
ஜூலை 06, 2026 21:47

Abolish ALL GenderBiased ProWomen& AntiMen Organisations Being UnConstitutional& Heavily Misused by CaseNewsVotePower Hungry Dreaded Conspirator SelfSaint MAFIAs


Subramanian
ஜூலை 07, 2026 09:36

Well said.


manian
ஜூலை 06, 2026 21:11

kudos to vijay govt for this women force.Hope they give more teeth to this setup.