அரகண்டநல்லுாரை மையமாக கொண்டு நீதிமன்றம் அமைக்கப்படுமா! சிக்கல் தீர்வதுடன் அரசுக்கு செலவும் குறைய வாய்ப்பு
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுாரை மையமாகக் கொண்டு நீதிமன்றம் துவங்க வேண்டும் என வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பது வியாபாரிகள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்களின் என்பது மட்டுமின்றி ஒட்டுமொதத் தொகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. ஆனால் அப்போதைய அரசு அரசியல் காரணங்களுக்காக திருக்கோவிலுார் மற்றும் 20 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், திருக்கோவிலுார் தொகுதிக்குட்பட்ட 70 சதவீதம் பகுதியை விழுப்புரம் மாவட்டத்திலும் சேர்த்தது. இதன் காரணமாக திருக்கோவிலுாருக்கு அருகில் ஒரு சில கி.மீ., துாரத்தில் இருக்கும் அரகண்டநல்லுார், மணம்பூண்டி என ஒட்டுமொத்த திருக்கோவிலுார் தொகுதி மக்களுக்கும் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் எழுந்துள்ளது. இது கோர்ட் விஷயத்திலும் சிக்கல் உருவானது. திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டதால் கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லுார் தாலுகாவைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக கண்டாச்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் சிவில் வழக்கிற்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்திற்கும், குற்ற வழக்குகளுக்கு அரகண்டநல்லுார் காவல் நிலைய எல்லை பகுதியைச் சேர்ந்தவர்கள் திருவெண்ணைநல்லுாருக்கும், கண்டாச்சிபுரம் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தவர்கள் விழுப்புரம் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டனர். இதனால் சமீபத்தில் சார்பு நீதிமன்றமாக தரம் உயர்த்தப்பட்ட திருக்கோவிலுார் நீதிமன்றத்தில் வழக்குகள் வெகுவாக குறைந்தது. இதனால் வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் வழக்கு விசாரணைக்காக திருவெண்ணைநல்லுார், விக்கிரவாண்டி, விழுப்புரம் என பல்வேறு நீதிமன்றங்களுக்கு அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். இதில் போலீசாரும் அடங்குவர். எப்படியும் திருக்கோவிலுார் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைந்து விடும். இதற்காக கடந்த கால ஆட்சியில் ஆதரவு தெரிவித்த தி.மு.க., அரசு தீர்வு காணும் என நம்பி இருந்த வழக்கறிஞர்கள், தேர்தல் நெருங்கி விட்ட சூழல் இல்லாமல் போனது. கண்டாச்சிபுரம் தாலுகாவிற்கு மையப் பகுதியாக இருக்கும் மணம்பூண்டி, அரகண்டநல்லுார், முகையூர் பகுதியை மையமாகக் கொண்டு நீதிமன்றத்தை தொடங்க வலியுறுத்தி நேற்று அரகண்டநல்லுார் கடை வீதியில் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, அனைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். திருக்கோவிலுார் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் உட்பட பலரும் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். அரசியல் கட்சிகள் சார்பில் இந்திய கம்யூ., கட்சியினர் பேசினர். சிக்கலும் தீரும் செலவும் குறையும் திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்டத்தில் இணைப்பதன் மூலம் கண்டாச்சிபுரம் தாலுகா வழக்குகள் முழுவதையும் திருக்கோவிலுார் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியும், இதனால் திருக்கோவிலுார் தொகுதி முழுதையும் உள்ளடக்கிய வழக்குகளை ஒரே இடத்தில் சிரமமின்றி கையாள முடியும். அத்துடன் வழக்கு தொடுப்பவர்களின் அலைக்கழிப்பிற்கும் தீர்வு கிடைக்கும். அரசும் புதிதாக ஒரு நீதிமன்றத்தை உருவாக்கி செலவு செய்வதைத் தவிர்க்க முடியும். மேலும் குறைந்த அளவு மக்கள் தொகையை உள்ளடக்கிய அரகண்டநல்லுார் பேரூராட்சியை, திருக்கோவிலுார் பேரூராட்சியுடன் இணைத்து அரசின் கூடுதல் செலவினத்தை குறைப்பதுடன் எதிர்காலத்தில் திருக்கோவிலுார் நகராட்சி, மாவட்ட தலைநகருக்கான அந்தஸ்தை பெரும் என்ற கூற்றையும் முன்வைக்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள். வரும் தேர்தலில் இப்பிரச்னை தொகுதியில் பலமாக எதிரொலிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.