உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கூட்டாளியை எரித்துக் கொன்ற வழக்கில் வரிச்சியூர் செல்வம் உட்பட 7 பேர் ஆஜர்; ஆக., 25ல் மீண்டும் ஆஜராகவும் உத்தரவு

கூட்டாளியை எரித்துக் கொன்ற வழக்கில் வரிச்சியூர் செல்வம் உட்பட 7 பேர் ஆஜர்; ஆக., 25ல் மீண்டும் ஆஜராகவும் உத்தரவு

விருதுநகர்; கூட்டாளியை எரித்துக் கொலை செய்த வழக்கில் மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வம் உட்பட 7 பேர் விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று காலை ஆஜராயினர். அவர்கள் ஆக., 25 ல் மீண்டும் ஆஜராக நீதிபதி அங்காள ஈஸ்வரி உத்தரவிட்டார்.ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் நெருங்கிய கூட்டாளியான விருதுநகர் அல்லம்பட்டி செந்தில்குமார் 38, மாயமானதால் அவரது மனைவி முருகலட்சுமி 2021ல் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த விசாரணையில் இரட்டை கொலை வழக்கு ஒன்றில் செந்தில்குமாரால் தானும் போலீசில் சிக்கிவிடக்கூடும் என கருதி ஒரு கும்பல் அவரை சென்னையில் சுட்டுக்கொன்று உடலை துண்டு துண்டுகளாக வெட்டி தாமிரபரணி ஆற்றில் வீசியது தெரிய வந்தது.இவ்வழக்கில் 2023 ஜூன் 21ல் வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்து சாத்துார் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். அதன் பின் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இவ்வழக்கு விசாரணையை மே மாதம் விருதுநகர் ஜே.எம்.,2 நீதிமன்றம் ஸ்ரீவில்லிப்புத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றியது.அதன்படி ஸ்ரீவில்லிப்புத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூன் 16 காலை 10:20 மணிக்கு விசாரணைக்காக வரிச்சியூர் செல்வம் உட்பட 7 பேர் ஆஜராயினர். இவ்வழக்கை விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தும், ஜூலை 14ல் அங்கு ஆஜராகுமாறும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.அதன்படி விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று காலை 10:30 மணிக்கு வரிச்சியூர் செல்வம், கிருஷ்ணகுமார், ஈஸ்வர் சாய் தேஜூ, சதீஷ்குமார், சகாய டென்னிஸ் சரண் பாபு, பாலசுப்பிரமணியன் நீதிமன்றத்தில் ஆஜராயினர். மற்றொரு வழக்கில் சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த லோகேைஷ போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்கள் விசாரணைக்காக ஆக., 25ல் மீண்டும் ஆஜராக நீதிபதி அங்காள ஈஸ்வரி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி