ஸ்ரீவில்லிபுத்துாரில் மலைப்பாம்பு இறுக்கி விவசாயி பலி
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு பகவதி நகரை சேர்ந்த விவசாயி முத்தையா 59. பழங்குடியினரான இவர், மாடுகளை வளர்த்து வருகிறார். வனச் சுற்றுச் சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினராக உள்ளார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணி மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை தேடி காட்டிற்கு சென்றவர் இரவு 7:00 மணி வரை வீட்டிற்கு திரும்பவில்லை. அவரது மனைவி சின்னதாய், மகன் கருப்பசாமி மலையடிவாரத்தில் தேடியுள்ளனர். பேயனாற்று ஓடையில் ஸ்ரீவி.,நகராட்சியின் ஏழாவது குடிநீர் கிணறு அருகில் முத்தையா இறந்து கிடந்த நிலையில் மலைப்பாம்பு ஒன்றும் அங்கே கிடந்துள்ளது. மலைப்பாம்பை காட்டிற்குள் விரட்டி விட்டு அவரது உடலை ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பிரேத பரிசோதனையில் அவரது உடலை மலைப்பாம்பு இறுக்கியும், முகத்தில் கடித்ததிலும் உயிரிழந்தது தெரிந்தது. மம்சாபுரம் போலீசார், ஸ்ரீ வில்லிபுத்தூர் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.